Friday, December 2, 2011

தேய் பிறை



பொன்.காந்தன்



கட்டழகியென
கண்ணுக்குள் நிற்கிறாய் நேற்று
இன்று
பொட்டற்று போய்விட்ட
உன் முகமும்
புன்னகை தொலைந்த
உன் பொலிவுமாய்
விட்டு விடுதலையாக
புறப்பட்ட சிறகுகள்
கொட்டுண்டு
பட்டு பூச்சிகள் இரண்டை
பாசத்துள் அணைத்தபடி
கொட்டுகிற கண்ணீரை
குனிந்த மறைத்தபடி
முன்னே நிற்கிறாய் முழுமதியே!
என்னே விதியதுவோ
உன்னைப்போல் கண்ணீரால்
ஊர் நிறைந்து கிடக்கின்றது
மின்னல்போல் மறைந்த
உன் மிடுக்கான கனவுகள்
மீண்டும் இனிவருமா
இல்லை நீ தனி மரமா
இல்லை இல்லையென
சொல்லத்துடிக்கிறேன் நான்
இச்சொல்
மொத்தத்தமிழினத்தின் மொழியாகுமா!