Wednesday, July 6, 2016

சுயநலம்



மெல்லிடையாளாய் உனைக்கண்டேன்
மழை மேகத்திரள் போல
கன்னியுன் கூந்தலுக்கு
ஓர் கவிதை சூடவும்
ஏனோ மனம் ஒப்பவில்லை
வெண்ணிலவாக்கி உன் விழியில் நீந்தும்
எண்ணிலா மீன்களுக்கும்
ஏனோ நான் வலை வீசவில்லை
விண்ணிலா மண்ணிலா நீயுதித்தாயென
ஒரு வினாக் கூட நான் எழுப்பவில்லை
இன்பநாள் அருகி
ஏறுபோலொரு காளை பற்றி
தேனிலா காணும் திகட்டாத
நாள் பொழுதில்
இணையராகி நெருங்கி
நீ திரிய கண்டுநான்
உனை கடுகளவும் நினைத்தில்லை
இன்று நான் உனக்கு எழுதுகிறேன்
ஏன்
அது சுயநலம்தான்
முந்தநாள் உன் மேனி
முன்னே பெருத்து
முகமும் கொஞ்சம் மொளுமொளுத்து
சொன்னதுபார் சேதி
கர்ப்பமாய் இருக்கிறேன் என
கரம் பற்றியவனுக்கில்லா எழுச்சி எனக்கு
மெல்லமாய் நட
உள்ளத்தில் நல்ல உவகை கொள்;
கள்ளமாயும் கனக்க சாப்பிடு
முடிந்தால் பொன்னியின் செல்வனை
கொஞ்சம் புரட்டிப்பார்
பூவரசம் பூவை ரசி
சங்கிலியன் தோப்பு பக்கம் போய்வா
பாரதியின் பாடல்கள் கேள்
கணணியில் இருந்து விளையாடு
என்னவோ எனக்குத் தெரியாது
உன்னை நான் இப்பொழுது
பெண்ணென்று நினைக்கவில்லை
எம் மண்ணை நிரப்பப்போகும்
நல்ல மழையென பார்க்கிறேன்
நல்ல தமிழ் பிள்ளை பெற்றுத்தா
பெற்றுத்தா பெற்றுத்தா பெற்றுத்தா!

எனது நாள்



இன்று 
உங்கள் பிறந்த நாளாக இருக்கலாம்
உங்கள் காதலை சொன்ன நாள்
மற்றும் ஏமாந்த நாளாக கூட இருக்கலாம்
உங்கள் திருமண நாள்
மற்றும்
கனவுகள் தொலைந்த நாளாகவும் இருக்கலாம்
நீங்கள் பட்டம் பெற்ற மற்றும்
வேலைக்கு அலையத் தொடங்கிய
நாளாக கூட இருக்கலாம்
உங்கள் நேசத்துக்குரியவர்கள்
உயிர் பிரிந்த நாளாக கூட இருக்கலாம்
மன்னித்துக் கொள்ளுங்கள் என்னை
இன்று
சிறு வயதில் முதன்முதலில்
நான் வானவில்லை கண்ட நாள்
அது எங்கே முடிகிறதென
எட்டியும் பார்த்திருக்கிறேன்

யூலை 5




மூக்குக்கண்ணாடியோ
கண்ணாடிக்குவளையோ
கைத்தொலைபேசியோ
கைதவறி விழுகின்றபோது
பதறிப்போகின்ற எங்களின் மத்தியில்
நேற்று
உயிர் குவளையை வெடிக்கச்செய்தீர்கள்
சாக்கடையால் நிரம்பியிருக்கும்
எங்கள் வாழ்வின் மத்தியில்
உன்னத்தை எப்படி
எங்கே வைத்து அழகு பார்ப்பது
வாய்நிரம்ப எப்படி
அதை பாடுவது
கைபிசைந்து நிற்கிறேன்
எரிமலைக்குழம்புகள் மேல்
மயிலிறகால் எழுதப்படும்
இந்த புனித புராணத்தை
சீண்டப்பட்டுக்கொண்டிருக்கும்
காற்று வாங்கிக்கொண்டிருக்கும் காதலர்களோ
பனிமழையின் கீழ்
உதடு வெடித்துக்கொண்டிருக்கும் ஏதிலியோ
முடிவற்ற பிரிவுத்துயரத்தில்
பிறக்கும் சிலம்புச்சாலைகளோ
எழுதி முடிக்கும் என்பது நம்பிக்கை
வணங்க முடியாதவர்களின் புலம்பல்களாலும்
குமுற முடியாதவர்களின் மௌனத்தாலும்
இந்நாள் நிறைந்திருக்கிறது.....
பௌர்ணமியை மறைத்தெழுகிற வரிகள்
பிறைகளின் சாபங்களால் நிறைகிறது

பேய்கள்



ஒரு வித நிசப்தம்
சின்னாக்கள்
தள்ளிப்போங்கோ
ஆளாளுக்கு ஒரு பார்வை உறுக்கல்
பந்தத்துடன்
கறுத்த பருத்த ஒருவர்
அடுத்து கத்தியுடன் மற்றவர்
நடுவில்
உருசிபட ஆக்கிய
ஆக்கியகோழி ஆடு நண்டு இறால் கணவாய் பொரியல் துவையல்
பிட்டு இடியப்பம்
பழங்கள் அறுவகை பாக்கு வெத்திலை
பீடி சுருட்டு அரைப்போத்தல் சாராயம்
பெட்டியில் வைத்து
ஒற்றைப்பட ஒரு கூட்டம்
சந்திக்கு வந்து
பேய்க்கு படைத்து விட்டு திரும்புகையில்
காத்திருந்த நண்பர் கைவரிசையில்
கைக்கு வந்தது படையல்
உண்டு மகிழ்ந்தோம்
இன்றுவரை
அந்த இனிய நினைவுகளுடன்
மண்ணில் பல பேய்கள்
சந்திக்கழிப்புக்கள் கண்டால்
ஒரு நமட்டு சிரிப்புடன்.........

செம்மண் கறுப்பு



செம்மண்
எப்பொழுது பார்த்தாலும்
இச்சை தருவது
எதையாவது விதையென்று
எழுச்சி கொள்ளவைப்பது
தக்காளி வைத்துப்பார்
தங்கச்சங்கிலி தருவேன் என்றும்
பொயிலை வைத்துப்பார்
புதிய வீடு கட்டுவாய் என்றும்
வெங்காயம் வைத்துப்பார்
வெளிநாட்டு வாழ்க்கைதான் என்றும்
ஆசைதூண்டுவது போலிருக்கும்
ஓ! உண்மைதான்
கத்தரி வைப்போம் காடுபோல்
நடுவே கஞ்சா நடுவோம்
பக்கத்திலேய விற்றுக்
கோடி சம்பாதிக்க
காலம் கனிந்துளது இன்று என
தன் பத்தினியாள் கழுத்தில்
பளபளக்கும்
பத்துப்பவுண் தாலியை
பார்க்கிறது இக்கால பெருச்சாளி!

அதிஸ்டம்



பிரபல கணித வாத்தியார்
பென்சனியர் பேரம்பலம் எழுதுவது
வரம்பு கட்டி
நான் வளர்த்தெடுத்த
வணக்கத்துகுரிய மாணாக்கரே
எங்கெங்கோ உள்ளபோதும்
என் இதயத்தில் உள்ளீர்
உள்ளத்தைவிட்டு உதிர்கிறேன்
உங்களை நான் உயர் வரமென்பேன்
என் கைக்கடிகாரம் கழற்றி கறுவி
உங்கள் கன்னத்தில் மின்னிய
என் கைகளை ஒருமுறை பார்க்கிறேன்
எண்ணத்தில் உயர்ந்த நீங்கள் எழுதப்பட்டுள்ளீர்கள்
மடக்கை மனனத்தில்
தடக்கிவிழுந்த உங்களுக்கு
இடக்கை வலக்கை என்று
என் பிரம்பால்
தழும்புவர தாக்கியதும்
பின் ஓடிவந்து நீங்கள்
சேர் என்றழைக்க என் மனம் இளகியதும்
ஏன் அடித்தேன் என்று
இருத்திவைத்து உங்களுக்கு
மனம் திறந்து பேசியதும்
கடைசிவரை உங்கள்
தாயும் தந்தையும்
சேர் உங்களை நம்பித்தான்
இராப்பகலாய் இவர்களுக்காய்
ஓடாய்த்தேய்கிறோம்
அடித்தாலும் உதைத்தாலும்
ஏன் என்று கேட்கோம்
உருப்படியாய் இவர்களை
உய்வித்தால் போதுமென்பதும்
இப்பொழுது நினைத்தால் இனிக்கிறது
எப்பேற்பட்டது அந்த உறவு
காக்கட்டையில் என்னை காணும்போதே
தெருவில் ஒதுங்கி நின்று
வணக்கம் சொன்ன வளர்ப்பினில்
இன்று உங்களை வைத்தியனாய்
வாத்தியாராய் எக்கவுண்டன் எஞ்சினியராய்
சிந்தனை செயற்பாட்டாளராய் காணும்போது
வேளைக்கே நான் வாத்தியாராயும்
நீங்கள் மாணாக்கராயும் இருக்க வாய்த்தது
இப்பிறவி அதிஸ்டம் என்பேன்!

வேதம்




தெய்வங்கள் விரும்பிய உணவை
நாம் அறிந்திருந்தோம்
கடவுளருக்கு
எந்த ஆடை அழகென்றும்
அளவு அழகு பார்த்து அறிந்திருந்தோம்
இதயம் தொடும்வரை
தெய்வங்களோடு பேசிபேசி
அன்பு மொழியொன்று ஆக்கியிருந்தோம்
நினைத்து நினைத்துப் போனோம்
நாங்கள் போகும்போதுதான்
அந்த ஆலயங்களில் மணியொலி
அந்தக்கடவுளருக்கு பள்ளியெழுச்சி
நெக்குருக கசிந்து நின்றோம்
மூலஸ்தானத்தையும் தாண்டி
எமக்கு ஒரு இடம்
தெய்வங்கள் தந்திருந்தன
ஆரத்தழுவி
அந்த முற்றத்தில்
முழுநாளும் நாம் பூஜை செய்திருந்தோம்
அந்த ஆலயத்தில்
நாங்கள் எல்லோரும்அர்ச்சகர்கள்
கற்பூர ஆராத்தி காட்டினோம்
கொன்றையிலை
புன்னையிலை
வில்வமிலை
வேப்பிலை
மாவிலை வரிசையில்
எருக்கலையை சேர்க்கிறேன் நான்.......
எருக்கலை மாடத்தை வணங்கிய முனியென
வரலாறு அமையட்டும்....