Saturday, January 14, 2017

முற்றம்?

எட்டுக்கோடு கிளித்தட்டு
கிட்டிப்புள்ளு
ஒப்புச்சொல்லி
இழுபறிப்படும்
இனிய வட்டக்கிளிப்பு
வனிதையரின் கெந்திக்கோடு
கள்ளன் பொலிஸ்
கண்ணைப்பொத்தி
கிண்ணைப்பொத்தி இதுயார்
மரம்மட்டை மாமரம்
மல்லிகைப்பந்தல்
மாமியின் சேலைக்குள் ஒளிந்து
கூவென தேடும் ஒளிச்சுப்பிடிச்சு
எல்லாம் போச்சு
முற்றம் காலையில் இருப்பதுபோல்
கால்படாமல்
மணல்அளைந்து சுவடின்றி
மனம் மகிழ்ந்த கால்களின்றி
அந்நாளை மறந்து
ஆளில்லா வீடுபோல
அரவமற்று கிடக்கிறது
கூடியிருந்து உள்ளே
குமர் கிழவி பூட்டன்
ஆத்தை அப்பு
அத்தை சித்தி சித்தப்பு
ஈசிச்செயரால் ஒன்று
இடுப்பைபிடித்து ஒன்று
சுவரில் சாய்ந்து ஒ;ன்று
சுருட்டு பத்தி ஒன்று
உடும்பு பிடித்து ஒன்று
உச்சா போவதுபோல் ஒன்று
கட்டிலில் கிடந்தபடி ஒன்று
காலை பிளந்தபடி ஒன்று
கடைவாயில் வழிந்தோட
வக்கணை ஓப்பாரிகள்
வாள்வெட்டு வஞ்சனைகள்
மேக்கப்பில் சிந்துகின்ற
றெடி ரேக் கண்ணீரை
அண்ணாந்து நம்பி
அடுத்தபாக ஆவலுடன்
உறங்கப்போகிறது
ஊரெல்லாம் புகுந்து
யாரோ உழுகிறார்
ஏதோ விதைக்கிறார்
பாழ் பட்ட நிலம்
பட்டும் திருந்தவில்லை.
நான் யாரிடமும் பேசவில்லை!!


மரணங்களுக்கும் மரணங்களுக்குமான உரையாடல்
தொடரும் விநாடியில்
உயிர்கசியும் ஏக்கத்துக்கும் உயிர்கசியும் ஏக்கத்துக்குமான சந்திப்பு
சிதறுண்ட குழந்தைகளின்
பிஞ்சு விரல்களுக்கும் பிஞ்சுவிரல்களுக்குமான கைகுலுக்கல்
தான்யாவின் குடும்பத்தில்
தான்யாவைத்தவிர எல்லோரும் மடிந்துவிட்டார்கள்
இறுதிச் செய்தி ஸ்ரலின்கிராட்டில் இருந்து முள்ளிவாய்க்காலிற்கு
முள்ளிவாய்க்காலில் இருந்து அலப்போவிற்கு....
முன்னெப்போதும் அறியப்படாத முள்ளிவாய்க்கால்
முன்னேப்போதும் அறியப்படாத அலப்போ
உலகின் சக மனிதர்களுக்கு
ரத்தஆற்றாலும் உயிர்கள் கொட்டுண்ட நிலத்தாலுமே
அறியப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி உடையவர்களே
உங்கள் முகங்களினால் ஆன இந்த உலகத்தில்
ஒரு குழந்தையின் ஒரு நூற்றாண்டு கால மூச்சை
பனிமலைகள் இடையேயும்
பாலைவனங்களிடையேயும்
நதிக்கரைகளிலும்
கைகோர்த்து இடைதழுவி அணைத்து
ஓடித்திரிந்து ஒட்டிவைக்கும் காதல் இதயங்களை
பூமியை குளிர்விக்கும் மாயவிரல்களை
இதுவரை பார்த்திராத
ஆச்சர்ய கோல்களை உதைக்கப்போகும் பாதங்களை
உங்கள் பிள்ளைகளின் பிரியமான நண்பர்களை
நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டளைகளால் கொன்றுவிட்டீர்கள்
வாழ்கிறவர்களுக்காக வணங்கப்படுகின்ற கடவுள் போல்
இறந்தவர்களுக்காக வரும் கடவுள்
இரக்கமுள்ளவனாக இரக்கமாட்டான்
மரங்களும் கட்டிடங்களும் மின் ஒளிச்சாரல்களும் நிறைந்து
நந்திக்கடலோரத்தில் ரம்மியமாக மாறியிருக்கும் இயற்கை
எதுவும் நடவாததுபோல
முளைத்திருக்கும் காட்சிகள்
அலப்போவிலும் நடந்தேறும்.....
அலப்போ என பெரிய எழுத்தில் கரும்பச்சை நிறத்தில்
ஒரு வரவேற்பு பலகையை நட்டுவையுங்கள்
எப்போதாது நான் வரும்போது
ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்
கைப்பற்றப்பட்டவை
வெற்றிக்கொள்ளப்பட்டவை
எல்லாவற்றையும் அலப்போ வரும் வழியில்
எங்காவது காட்சிக்கு வையுங்கள்
மனதாபிமானத்துக்கான யுத்தத்தை விளக்கமளியுங்கள்
ஏன்சாகுறோம்
எதற்கு சாகிறோம்
எதனால் சாகிறோம்
என்று தெரியாமலே
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்
எத்தனை இலட்சம் உயிர்கள்!!
எல்லோரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்
அலேப்போ பற்றி யாரிடமும் நான் பேசவில்லை!!!
நெற்றியில் சரிந்துவிழும்
முடிகளை கோதிவிட்டு கோதிவிட்டு
சின்னவயசில்
கூட்டவும் கழிக்கவும்
மனசுக்குள் வைத்து தொடங்கி
பத்துக்கும் பத்தெடுக்கவைத்து
ரீச்சரிடம்
வெரி குட் வாங்கித்தந்த விரல்கள்
இப்போதும்
தலைகோதிவிடும் பழக்கமுடைய எனக்கு
நரைகளின் கணக்கை சொல்லாமல்
எப்பொழுதும் பிழை விடுகின்றன
வெரிகுட் !
ஏற இறங்க நூறு

அவசரமாய் அலுவலொன்று
அழைப்பொன்றில் வந்துவிட
யாழ்ப்பாண வசு பிடிக்க
வசுதரிப்பில் போய் நிற்க
காலடியில் கறிச் சென்று
கண்டியூர் பக்கமாக
வந்ததொன்று பாட்டும்
கேட்டிணுமாய் படிவரையும்
கூட்டமுமாய்
கைநீட்டி வாஞ்சையுடன்
கூறுங்கள் யாழுக்கோ
வாருங்கோ ஏறுங்கோ
படியடியில் தொங்குகின்ற
பையனின் பல்வரிசை
இடிபடும் சனத்துக்குள்
இடியப்பமாய் சிக்குண்டு
எதுவரைக்கும் போவதுநான்
முடிபறக்க பாய்கின்ற
முழு இறாத்தல் வசுவுக்குள்
அடிவயிற்றில் நோவெடுக்கும்
என நினைத்தும் அவசரமே
என்றெண்ணி
அதன் படியில் கால்வைக்க
சாவச்சேரியில்
விதிவந்து விபத்தாகி
பதின் உயிர்கள்
பறந்துவிட்ட
கதிகலங்கும்
சேதி மீண்டும்
இடிபோல நெஞ்சில்
சடுதியாய் எழுந்து நிற்க
இருவிழிபிதுங்கி என்
ஈரல்வரை கிடுகிடுக்க
முறிகண்டிப்பிள்ளையாரை
முதலாவதாய் வேண்டிக்கொண்டேன்
முந்துகின்ற வசு ஒவொன்றும்
முடிவெழுதும் வேளைபோல்
பிள்ளைகுட்டிகளை பேரன்பு
மனுசியினை என்னுள்ள
எண்ண வைக்கும்
மடுமாதா மனசுக்குள்
பளைவரையும் இந்த
உயிர்படும்பாடு ஒன்றரிரண்டா
அங்கும் கொஞ்சம்
அள்ளி அடைந்து
ஆலப்போல் வேலப்போல்
ஆலம்விழுதுபோல்
மாமன் நெஞ்சில்
பாட்டுப்போட்டு
பாச நெஞ்சு பரிதவிக்க
பம்மிங்கில் ஏற
பதகளிப்பட்டு
அங்கங்கங்கு பிடித்து
முன்னால குனிஞ்சு
முகப்புக்கண்ணாடியால்
முகவரியை பார்க்க
விண்ணால இறங்கி
விசுக்கென்று வந்ததுபோல்
சன்னலோடுரசி சறுக்கியொன்று
போகும்போது
உச்சிலடி அம்மனை
ஊரிலுள்ள பிள்ளையாரை
நல்லூர் கந்தனை
நான் நினைந்துருகி நின்று
நாவற்குழி தாண்டும்போது
சுண்டல் காரனோ சுடச்சுட என்கிறான்
அண்ணல் நான்படும்
அவஸ்த்தைகளை
சுண்டலே நீயறிவாயா
ஏற இறங்க காசு நூறுதான்
பத்திருபதாயிரத்துக்கு நேத்தி
செத்துப்போய் நான்
வசு ஸ்ராண்டில் இறங்குகையில்
றைவர் முகம் பார்த்தேன்
அது இறைவர் முகம்தான்!!
முள்ளிவாய்க்காலை மறக்காதே
அலப்போவை மறக்காதே

எந்த வல்லரசின் தூதர்களின்
முதுகிலும்
யாரும் சுட்டதாய் ஞாபகம் இல்லை
தமிழீழத்தை மறக்காதே
முள்ளிவாய்க்காலை மறக்காதே
துப்பாகியுடன் எவரும்
தொண்டையில் நீர்வற்ற
உலகத்தின் மூலைவரை குரல் கேட்க
கத்தியதாக குறிப்புக்கள் இல்லை
தூதர்கள்
புகைப்படக்கண்காட்சிகளில்
சுதந்திரமாக பயங்கரவாதம் பற்றி
பேசிக்கொண்டிருந்தார்கள்
எல்லா விருந்துகளிலும் மகிழ்ந்திருந்தார்கள்
அவர்கள் எல்லோருக்கும் முதுகில்
புளுப்போல மரணம் ஊர்கின்ற
திகிலான அனுபவ நாட்கள் ஏற்படவில்லை
தங்கள் மெய்ப்பாதுகாவலர் பற்றிய பூர்வீகங்களை
அவசரமாக தேடி தேடி
தூக்கம் தொலைந்த இரவுகளை
அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் பரிசளித்ததாக
எந்த கவிதைகளும் இல்லை
தனது வாகன ஓட்டுனர்
வாயிற்காவலர்
நம்பிக்கையான முடி திருத்துனர்
சமையற்காரர்
எல்லோர் மீதும்
ஒருவனின் முகமே படிந்திருந்திருப்பதுபோல
மரண பிரம்மையை
எவரும் கொடுத்திருக்கவில்லை
ஆயினும்
முள்ளிவாய்க்காலில்
பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாக
உலகத்திற்கு பிரகடனம் செய்யப்பட்டது
அலப்போவை மறக்காதே
சிரியாவை மறக்காதே என்றபடி
துப்பாக்கி ஏந்தி
இருபத்திரண்டே வயதானவன்
அமைத்த மரண களரி
இறந்தவர்களுக்கான கடவுள்
இரக்கமில்லாதவன் என்கிறதா
ஒரு குழந்தையின் மரணத்தில் எழுந்த
மானுட நேயம் என்பதா
தன்னினம் மடிகிறபோது
எங்கிருப்பினும் எவனொருவனும்
எதையோ செய்வான் என்பதா
முடிவாக
கைகட்டி வாய்பொத்தி
தலைகுனிந்து நின்று
வல்லரசு சொல்கிறது
அது ஒரு பயங்கரவாதத்தாக்குதல் என்பதை
எல்லா ஓட்டைகளாலும் உள்வாங்கிக்கொண்டு
உறங்கி இருளிலேயே எழுவதா!!
நண்டுகளாய் நடனமாடியும்
மீள்களாய் துள்ளியும்
வெண்நுரைகளாய் பூத்துக் குலுங்கியும்
அந்திப்பொழுதில்
பரிதியுடன் கலந்து
சித்திரங்கள் நூறு வரைந்தும்
வெண்நிலவின் நிழல் ஏந்தி
நீல தேவதையாய்
விடியவிடிய அருகிருந்தும்
அம்மாவின் மடியாய்
அப்பாவின் தோளாய்
தாய் மாமனின் செல்லமாய்
அழுகையை ஆற்ற
கடலே
நீ இத்தனை ஆண்டுளாய்
தவிக்கிறபோதும்
வலம்புரிச்சங்குகளாய்
சிப்பிமுத்துக்களாய்
நிலைத்திருந்த எங்கள் புன்னகைமீது
அந்தக் காலையில்
அத்தனை பொறாமையும்
ஆசையும் நீ ஒரு போதும் கொண்டிருக்கக்கூடாது
அதற்குப்பிறகு
அம்பாப்பாடல்களில்
உனது துரோகமும் இழையோடுகின்றது
நீ காவிச்சென்ற
நத்தார் பண்டிகையில்
மணலில் விளையாடிக்களைத்து
நல்ல தூக்கத்தில் இருந்த
மழலை பிறின்சி
புதுவருடத்திற்கு மருன் வர்ணத்தில்
ஒரு புது சுடிதார் வாங்கி வைத்திருந்தாள்
றீற்றாவுக்கு
திருமணம் நிச்சயமாகியிருந்தது
பேராளி சமரழகி
விடுமுறையில் அம்மாவிடம் வந்திருந்தாள்
நிக்சனுக்கு பல்கலைக்கழகம் கிடைத்திருந்தது
சம்மாட்டியாரின் மருமகள்
தலைப்பிரசவத்திற்கு தயாராக இருந்தாள்
பெட்டகப்பேச்சு

மாலை தேனீரை மசமசப்பு தீர்ந்துவிட
மடியில் வைத்தபடி
வடையில் ஒரு கடியும்
மாண்புமிகு துணையாளின்
சீனி தணித்த
சிக்கனத் தேனீரின் குடியும்
படியில் இருந்தபடி
பழைய பத்திரிகை சிலதை
முதிரைப்பெட்டகத்தின்
முதல் கதவை முக்கித்திறந்து
தட்டியிழுத்து தடவியெடுத்து
பத்திரப்படுத்திய பரவசத்துடன்
பக்கத்தில் நின்ற
பாசத்துணையை பார்வையால் துளாவி
பக்கங்கள் சிலதை திறக்க
பால்ய நினைவுகள்
வெட்கத்தில் அவள் விறாந்தையில் அகல
சித்திரம்போலொரு வாழ்வை
சீக்கிரம் தொலைத்தது தெரு
சின்ன வயதில்
பட்டுக்கோட்டை எனக்கு
பாட்டெழுதும் கவி
கல்யாணசுந்தரத்தின்
கொட்டும்;சிந்தனையால் அறிமுகம்
எட்டயபுரம் கூட
அப்பெருங்கவி ஆற்றலில்தான்
மட்டுநகர் விபுலானந்தரின்
வித்தகத்தில்
பண்டாரவன்னியனால்
கற்சிலை மடு
கட்டையில் போனாலும்
கரியிலும் மறவாது
ஆழிக்குமரனால்
அலைதழுவும் ஊரொன்று
அண்ணன் பிரபாகரனால்
வல்வெட்டித்துறை
வல்லமை தவில் தட்சணாமூர்த்தியால்
அளவெட்டிபதி
அந்நாளில் உள்ளத்தில்
அறிமுகம் ஆனது
விக்டரால் அடம்பனும்
வீரி மாலதியால் ஆட்காட்டிவெளியும்
மில்லரால் நெல்லியடியும்
உள்ளத்தில் கரைந்ததுகாண்
சொல்ல வெட்கம் இன்று
கசிப்பால் சில ஊர்கள்
கஞ்சாவால் சில ஊர்கள்
கற்பழிப்பால் சில ஊர்கள்
வாள்வெட்டில் சில ஊர்கள்
இனிவரும் சந்ததிக்கு
இந்த நாள் பத்திரிகை
எடுத்துப்போகிறது.
வடக்கரசின் அடிபிடியால்
கைதடியும் கூட
தடுக்குப்பட்டு தலைகுனிந்து
தலைப்புச்செய்தியாகிறது.
இந்நாள் பத்திரிகையை
எடுத்து வைத்து பெருமைகொள்ள
இனி எனக்கு முடியாது
எடடி ஒரு நெருப்பெட்டி
கடந்த ஆறாண்டு
தொந்தி பந்தியோடு
அந்திவரை வாசிக்க
அகன்று விரிந்து வந்து
மந்து பற்றி கிடக்கும்
பத்திரிகைகளை
அக்கினிக்கு இரையாக்கு!!!
இருத்தல்

உடைந்து விழுகின்றன
பெருஞ்சுவரின் கற்கள்
இப்போது
உள்ளிருந்தே உதைக்கப்படுகின்றது
கட்டியவர்களும் சிக்குண்டனராம்
அவ்வப்போது இடுக்குகளினூடே
புறப்படும் இனிய கீதம்
சாமகானத்தின் உருப்படிகளை
தேடியலைகின்றது
அவ்வப்போது இடுக்குகளினூடே
நசியுண்டு பாயும்
ஒளி வட்டங்களின் கீற்று
ஸ்பரிசத்தால் துளிர்களை
நீவிவிடும் விடாயில்
வால்களின் தீப்பந்தம் அணைகின்றது
உள்ளிருந்துதைப்பில்
மலர்ந்திருக்கும் தாமரை
இதழ்களின் நடுவில்
பிரசவக்குழந்தையின் அழுகையில்
இரவின் நிறத்தில்
வாசத்தில்
வெண்மை பரவும் மல்லிகையில்
காத்திருக்கச் சொல்கிறது
உடைந்துவிழும் பெருஞ்சுவரின் கற்கள்
இலச்சுமி

மட்டற்ற மகிழ்ச்சி
மாடு வாங்கினார்
முன்னொருநாள்
மயில்வாகனத்தார்
கொட்டிலிட்டார்
குளிருக்கு நெருப்பிட்டார்
கட்டாக புல்லுவெட்டி
கொக்கை கட்டி
பக்கத்து வேலியிலும்
பதம்பார்த்து
குழை கட்டி
புண்ணாக்கு கஞ்சியென
பொழுதெல்லாம்
அம்மாட்டுக்கு
கைத்தீன் கவனிப்பு
கன்னிமாடு
கத்தத்தொடங்க
கட்டியிழுத்துப்போய்
பட்டி நான்பன்னொன்றுடன் பழகவிட்டார்
எட்டுநாள் கழிய
.இளைத்துப்போன மாட்டை
தட்டிக்கொடுத்து
தலைப்பிரசவ நாளை கனவுகண்டு
வீடு கொண்டு வந்து
கன்று தாய்ச்சியென்று
நின்று கவனித்தார்
பட்டிப்பொங்கலுக்கு
நெற்றியில் ஒரு பொட்டும்வைத்து
நெகிழ்ந்தும்போனார்
மாதமாகி
மாடு கன்றீன
நேத்தியும் வைத்தார்
நினைத்ததுபோல்
யாவும் நலம்
அனுபவஸ்த்தர் துணையோடு
கடும்பு கறந்து
காய்ச்சிபரிமாறி
காலைமாலை இனி
கறந்துகொடுத்து
பலனை பெறலாமென
பக்கத்தாரோடு
பால் கொடுக்கப்பேசி
அன்றோர் காலை
அகன்றவாய் செம்புடன்
குந்தியிருந்து
கொழுத்த முலையில்
குளிர்ந்த நீர் தெளித்து
பற்றியிழுக்க
படாரென்று காலடி
பல்வரிசைப்பக்கமாய் விழ
குப்புற விழுந்து செம்பு
குத்திக்கரணமடித்தடங்க
திட்டியபடி எழுந்து
எட்டிநின்று
வெட்டுறவர் கையில் கொடுப்பேன்
விற்றுவிடுவேன் என
வெருட்டிபின்
முட்டியமாட்டுக்கு
முக்கால்வாளி புண்ணாக்கு வைத்து
முதுகை தடவி
இலச்சுமி என அன்போடழைத்து
மெல்ல முலையில்
மூன்றுவிரல் பிடித்து
கள்ளமாட்டை வளைத்து
கறந்தார் சொம்புநிறைய பால்
இன்றவர் பட்டியில்
இலச்சுமி புவனா பூமணி
இன்னும்பல
கத்தினால் விட
கறுத்த நான்பனொன்று
மட்டற்ற மகிழ்ச்சி மயில்வாகனத்தாருக்கு
நமக்கும்தான்!

பள்ளி வயதில்
பயந்து பயந்து பார்த்த
அத்தனையும்
பின்னரான நாட்களில் 
காதலாய் கவிதையாய் வித்தையாய்
வீச்சாய் ஆயிற்று
நினைத்துப்பார்க்கும்போது
பாதி திறந்த சாளரங்களும்
கதவு இடைவெளிகளும்
எவ்வளவு அர்த்தமுள்ளவை
வதனி ரீச்சர்

வதனி கவனி
இதுவரை நீ வதனி
இனி
தடைதாண்டி
போட்டி பரீட்சை
விடைதாண்டி
வேலையற்ற
பட்டதாரியென்ற
பழி தாண்டி
படிப்பித்தல் நியமனத்தில்
படியேறுகின்ற ரீச்சர்வதனி
அரச நியமனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
ஆண்டவனுக்கு அருகில்
அமரும் அதிஸ்டம்
அம்மணி உனக்கு
காலை ஒன்பது மணிக்கே
இதுவரை தொடங்கிய உன் நாள்
நாளையிலிருந்து
அதிகாலை நான்கிற்கே ஆரம்பம்
பள்ளியெழுந்து நீ
அம்மாளாச்சி போலவே
தெருவில் இறங்கப்போகிறாய்
காலை வணக்கம் சொல்லியே
உன்னை ஒரு களங்கமற்ற கூட்டம்
சுற்றிவரத்தொடங்கும்
கைபற்றியிழுக்கும்
புன்னகை பூரிப்பு மௌனம் என
வெள்ளைச்சீருடைக்குள் தோன்றும்
பாசைகளையெல்லாம்
நீ மொழிபெயர்த்தாகவேண்டும்
வதனி கவனி
நேற்றுவரை நீவதனி
இன்று நீ ரீச்சர்வதனி
இனி நீ ஆயிரம் கண்களுக்குள் நடக்கிறாய்
காயதாய் இருக்கும் உன் காதல்கூட
கனியாது போகலாம்
காட்டுமல்லிகை போல
உன் சின்னக்கனவுகள்
வாசம் நுகரப்படாமலே
வாழ்ந்துமுடிந்தும் போகலாம்
ஆழமான உள்ளங்களின் கதவு
உனக்கு அகன்று திறந்திருக்கிறது
ஆங்கோர் உயர் பீடத்தில்
நீ ஓய்வு பெறும் போது
சூட்டுவதற்கான
மண்ணில் அழியா மகா கிரீடங்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது
எல்லாவற்றின் முன்பும்
உன் கற்பித்தல் என்ற
கனவுப் பாதையில் நடக்கத்தொடங்குகிறாய்
அதிபரை கரைக்கும் மருந்து
ஆங்காங்கு வந்து
இடைக்குள் செருகும்
கற்களை அகற்றும் கைவசியம்
சேடிகளின் வாயால்
உன் சிறப்புரைக்கவைக்கும்
காட்டின் நடுவில் இருக்கும்
புற்றில் சீறுகின்ற
ராஜநாகத்தின் நவரத்தினகல்
எல்லாம் வரப்பெற்ற வல்லமையாகுவாய்
மருதோண்டிவைத்து
மகிழ்ந்திருந்த உன் உள்ளங்கை
வெண்கட்டி விளைந்திருக்கும்
கைதடுமாறி உன் கன்னங்களில் கூட
சின்னமாயிருக்கும்
எல்லாமே
எண்ணற்றோர் எதிர்காலத்தை
நீ தீர்மானித்துக்கொண்டிருப்பதன் அழகு
இனி
பச்சை இல்லமா மஞ்சள் இல்லமா
சிவப்பு இல்லமா உனது
உன் ஆடைக்கனவுகளில்
அரைவாசி நாளையோடு முடிகின்றது
இனிச் சேலைக்குள் இருந்தே
ஆயிரம் வானவிற்களுக்கு வர்ணம்
கொடுக்கப்போகிறாய்
சுற்றுலாவிற்கு உன்னை முதல்வர் அழைத்து
முற்றிலும் நீயே பொறுப்பென்பார்
அப்போதெல்லாம்
திருமணம் ஆகாமலே
திரும்பி வந்து இறங்கும்வரை
பத்து நல்லதங்காளாய்
இருநூறு பிள்ளைகளுக்கு
தாயாக மாறவேண்டும்
ஆயாவாயும் மாறவேண்டும்
கறுத்தப்புள்ளிகளின்றி உன் பயணமிருந்தால்
அடுத்துனக்கு ஆசனங்கள் தேடிவரும்
தடுட்தாட்கொள்கின்ற சந்தர்ப்பங்களும்
தானாக விளையலாம்
நீ படுக்கமுடியாது இனி
பாடவேளைகள்தான் கனவாய் வரும்
படபடப்பும் இருக்கும்
புதிதாயும் ஏதும் கொண்டு செல்லவேண்டும்
உலகப்புதினங்களை உற்றுநோக்கவேண்டும்
அல்வா எடிசன்கள்
ஆபிரகாம் லிங்கன்கள் அலெக்ஸ்சாண்டர்கள் பிரபாகரன்கள்
ஓசாமாக்கள் தெரேசாக்கள் டயானாக்கள்
மூன்று இலைகளோடு உன் முன்
வகுப்பறையில் வந்திருக்கும்
எல்லாவற்றுக்கும்
உன்னிடம் பதிலிருக்கவேண்டும்
ஊமையானால்
உள்ளத்தில் வழங்கப்பட்ட உனக்கான உயர்பதவி
மெல்ல மெல்ல அகற்றப்படும்
என்ன செய்யப்போகிறாய்
நேற்றுவரை நீ வதனி
இனி நீ ரீச்சர் வதனி
கன்ன மயிர் பழுத்து
கடைசிப்பெருங்காலத்துள் நுழைகின்ற
எந்தனது நெஞ்சில்
சங்கரப்பிள்ளை சோதிநாதன் விந்தன்
மனோகரி குமார் அருள்நேசன் சசிகலா சிவகௌரி
சிறீசெல்வராஜா மோட்சலிங்கம் கனகேந்திரம் என்றொரு பட்டியல் நீள்கிறது
இவர்கள் என் ஆசிரியர்கள் இன்னும் பலர்
பக்கங்கள் பலவற்றை அலங்கரிப்பர்
ரீச்சர்வதனி
உந்தனது காலத்தில்
எத்தனை உள்ளங்களில் உட்காரப்போகிறாய்!!
ஒரு உண்மை!!

சித்திரை நாள் குறித்து
சீர் வரிசை சரிபார்த்து
இக்கணம் இருந்துபேசி
இருவீட்டார் அழைப்பாக
பத்திரிகை அச்சேற்றி
பலருக்கும் போய்ச்சேர்த்து
பல காரச் சூடுவைத்து
பந்தலையும் வரவைத்து
பழக்குலையும் கட்டிவிட்டு
பம்பரமாய் சுழன்ற அசதி
பன்னிரண்டு நடுநிசியில்
பாம்படித்துப்போட்டதுபோல்
படுதூக்கம் சரித்துவிட
பந்தலுக்குள் சிலபேரும்
பத்தியில சில கிழடும்
பெண்புரசு அறைக்குள்ளும்
புரண்டு கண் செருகிவிட
நாலரைக்கு வைத்த அலாம்
நாலுபேரை எழுப்பிட
அறைக்குள் வெளிச்சம்வர
வேதியக்கை விறைத்துப்போனார்
விடிஞ்சால் மணத்துக்கு
வெளிக்கிடும் மல்லிகையாம்
மணவாட்டி நித்தியா
மாயமாய் காணவில்லை
கனகம் ஓடிப்போய்
கக்கூசை திறந்து பார்த்து
கருக்கலுக்குள் ஓடிப்போய்
கிணத்தடியை எட்டிபாத்து
ஓடிவந்து அலுமாரியை
ஓவென்று திறந்து பார்க்க
ஒரு உடுப்பும் அங்கில்லை
முத்தன் பெடி மோகனுக்கும்
பத்தன் மகள் இவளுக்கும்
முளைத்திருந்த காதல் பற்றி
முன்னூரில் முணுமுணுப்பு
முடிச்சுக்குள் இருந்ததுண்டு
கத்துகிறார் பத்தர் இப்ப
கனகத்தை திட்டுகிறார்
கொத்துவன் எல்லாரையும்
கொளுத்தவள் போய்விட்டாள்
சத்தியமாய் அவளெனக்கு
சரித்திரத்தில் மகளில்லை
இன்றோடு போச்சென்மானம்
இனியெல்லாம் அவமானம்
இது நடந்து வருசங்கள்
இற்றைக்கு இருபத்தைந்து
நேற்றைக்கு நெடுநாள்பின்
பத்தரை பார்த்தபோதவர்
வார்த்தைக்கு வார்த்தை
நித்தியா நித்தியாதான்
மருமகனும் தங்கமாம்
மறு பேச்சு பேசாராம்
மகள் பெற்ற பிள்ளையும்
மகா கெட்டிக்காரியாம்
தொப்பூள் கொடி பிணைப்பும்
தோள் சுமந்த அச்சுகமும்
எத்தனை ஆச்சர்யம்
எப்போதும் ஒரு உண்மை!!
நாட்டை பிடிக்காது போனோம் 
சரி 
நாளை 
மாட்டையாவது ....
நீ முப்படை கொண்டு களமாடினாய் என்று சொல்ல எதிர்காலம் அது ஒரு பொய் கற்பனை என்று நம்ப வேண்டுமாயின் இன்றைக்கு நீ காளையை அடக்குகிற வரலாறு பதியப்பட கூடாது அப்போது அன்றய ஏறு தழுவுதலும் கற்பனை ஆகும் ஒரு கோடி ஜல்லிகட்டை ஈழத்தில் நீ இழந்து விட்டாய் ! மொத்த தமிழனும் நுகங்களில் பூட்டப்பட்டு இருப்பது எனக்கு தெரிகிறது