Saturday, February 5, 2011

நமது கடன்

பொன்.காந்தன்

 
வீட்டில் வளர்த்த நாய்க்குட்டி
ஆடு செத்ததற்காய்
விம்மி அழுதிருக்கிறேன்.
மாட்டினை கையாலும்
பூனையின் மேனியை காலாலும்
வருடிவிட்டிருக்கிறேன் சிறுவயதில்.
இப்போது நான் ஒரு குழந்தைக்குத் தந்தை.
இப்போது
நாய்க்குட்டிக்காக
ஆட்டுக்காக அழுவதில்லை
ஆனால்
நிச்சயமாக
அவைக்காக அழுது
கல்லறை கட்டி கும்பிட்டிருப்பேன்
என் காலடியில்
என் ஒவ்வொரு வயதில்
என் மனிதர்களின் மரணங்கள் மலியாதுவிட்டிருந்தால்.

இன்று காலையும் அரசின் விமானங்கள்
எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின
சிலர் பதுங்கு குழிக்குள் போனார்கள்
பலர் வெளியில் நின்று வானைப்பார்த்தார்கள்
சிலர் தெருவிலே
வழமைபோலவே போய்க்கொண்டிருந்தார்கள்
குண்டுகள் வீசப்பட்டன
கிராமத்தின் ஒருதிசையில் புகைமண்டலம்
சிலர் காயப்பட்டு தெருவால் வேகமாக கொண்டுசெல்லப்பட்டார்கள்
எத்தனைபேர் செத்தார்கள்
பலருக்கு அந்தக்கணக்குத் தான் தேவையாய் இருந்தது.

எனத மனிதர்கள்
நான்
எவ்வளவு மாறிவிட்டோம்
பெருமிதப்படுகின்றேன்.
முடியும்
இந்த மரத்துப்போன எங்கள் மனசால்
எமது உரிமைகளை
மிக விரைவில் யாரிடம் இருந்து
பெற்றுக்கொள்ள முடியும்.
அரசால் எங்கள் மனிதர்களின் மரணங்கள் மலிய மலிய
மரத்துப்போன எங்கள் மனசால்
முடியும்
நாம் நினைக்கின்ற எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.

சிலவேளைகளில்
அரசின் குண்டுவீச்சில்
மாடுகளும் ஆடுகளும்
நாய்;களும்
சிதறிச்செத்தன.
சொல்லிச் சிரித்தார்கள் எம் மனிதர்கள்
நானும் தான்.
முடியும்
எல்லாம் முடியும்
மரத்துப்போன இந்த மனசால்.
எமக்கான எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எல்லாம்
எங்கள் குழந்தைகளின் கண்ணில் படாதபடி.

றோசாப்பு ஏன் சிவப்பாக இருக்கிறது என்ற
என் குழந்தையின்
வாழ்வின் முதல் கேள்வியில்
என்னுள் ஆயிரமாயிரம் முட்கள் தைத்தன.
எங்கள் குழந்தைகளின் கண்களை
பலமுறை பொத்தவேண்டியவர்களாய் இருக்கிறோம்.
சிலவேளை
எங்கள் முகங்களையும் பார்க்காதபடி
ஆனாலும்
எங்கள் முகங்கள் எங்களுக்கு மட்டுமே.
நியாயமாக இருக்கட்டும்
இந்த முகத்தை வைத்துக்கொண்டு
முடியும்
இழந்த எல்லாவற்றையும் கொண்டுவரமுடியும்
எங்கள் குழந்தையின் கண்ணில்
நாய்க்குட்டிக்காகவும்
ஆட்டுக்காகவும் கண்ணீரையும்
மாட்டின் மீதான பூனையின் மீதான வருடலையும்
கொண்டுவர முடியும்.
இல்லையெனில்
நாம் மரணித்துக் கிடக்கையில்
எமது பிணம் எதிர்பார்க்கக்கூடிய
எமது குழந்தையின்
மாபெரும் அழுகை இல்லாதிருக்கும் சாபக்கேடு
எமை சிதையில் வதைத்தெரிக்கும்.
--------------------------------------------------

No comments:

Post a Comment