Saturday, February 5, 2011

காத்திருப்பின் கடைசிக்காலம்

பொன்.காந்தன்

 
வரவேண்டிய பொழுதில் வா
நீயாக வா
அப்பெரும் இரைச்சலுக்குள் இல்லாத
எனது குரலும்
உன்னை அழைக்கிறது
இப்பெரும் அமைதிக்குள் இல்லாத
என் மெளனமும்
உன்னை அழைக்கிறது
உன் முதல் பார்வைவயில்
எல்லாம் விழித்துக்கொள்ளவா
அப்போது புயலை பிடித்துலுப்பி
நிறுத்திற நிறுத்தில்
எனது கிளைகள் நிரம்பிய வெற்றியிடம்
அழகிய கண்களாகலாம்
எனக்குள் இருக்கும் உன்னை பற்றியவை
என்னை மீறியவை
காற்றில் அடித்துச்செல்லப்பட்டும் இருக்கிறது
இந்தப்பறவை சிலவேளை
எனினும் பறவைக்கென்று சிலதுண்டு
அது எப்போதும் பறவையோடு பறந்து வரும்
பறக்காதபோதும் பறந்துகொண்டிருக்கும்
சிறகுகளுக்குள் சிக்காமலும் காத்திருக்கும் அது
பார்த்தீர்களா
இப்போது எங்கேயோ எதிலோ
குந்தியிருக்கிறேன் நான்
புரிந்துகொள்க
எதையோ புரிந்துகொள்க
வா வரவேண்டிய பொழுதில் வா
பச்சைக்குள் பச்சையாக
கறுப்புக்குள் கறுப்பாக
வர்ணங்களின் வேடமின்றி வா
குளத்தில் புளுதி பறக்கிறது
மரத்தில் கிளைகள் ஒடிகிறது
வந்து பார்த்துவிட்டு
ஏமாந்து ஏமாந்து போகின்றன
எல்லாவற்றிலும் மேலாக
மிக மிகப் பசுமையாக
காத்திருப்பு மட்டும்
அது முற்றிப்பழுத்து
நீயும் முற்றிப்பழுத்து
நடக்கிற சந்திப்பில்
கனி கனியை உண்ணுமெனில்
இன்றைய பல என்னவாகும்

No comments:

Post a Comment