Wednesday, July 6, 2016

யூலை 5




மூக்குக்கண்ணாடியோ
கண்ணாடிக்குவளையோ
கைத்தொலைபேசியோ
கைதவறி விழுகின்றபோது
பதறிப்போகின்ற எங்களின் மத்தியில்
நேற்று
உயிர் குவளையை வெடிக்கச்செய்தீர்கள்
சாக்கடையால் நிரம்பியிருக்கும்
எங்கள் வாழ்வின் மத்தியில்
உன்னத்தை எப்படி
எங்கே வைத்து அழகு பார்ப்பது
வாய்நிரம்ப எப்படி
அதை பாடுவது
கைபிசைந்து நிற்கிறேன்
எரிமலைக்குழம்புகள் மேல்
மயிலிறகால் எழுதப்படும்
இந்த புனித புராணத்தை
சீண்டப்பட்டுக்கொண்டிருக்கும்
காற்று வாங்கிக்கொண்டிருக்கும் காதலர்களோ
பனிமழையின் கீழ்
உதடு வெடித்துக்கொண்டிருக்கும் ஏதிலியோ
முடிவற்ற பிரிவுத்துயரத்தில்
பிறக்கும் சிலம்புச்சாலைகளோ
எழுதி முடிக்கும் என்பது நம்பிக்கை
வணங்க முடியாதவர்களின் புலம்பல்களாலும்
குமுற முடியாதவர்களின் மௌனத்தாலும்
இந்நாள் நிறைந்திருக்கிறது.....
பௌர்ணமியை மறைத்தெழுகிற வரிகள்
பிறைகளின் சாபங்களால் நிறைகிறது

No comments:

Post a Comment