Wednesday, July 6, 2016

அதிஸ்டம்



பிரபல கணித வாத்தியார்
பென்சனியர் பேரம்பலம் எழுதுவது
வரம்பு கட்டி
நான் வளர்த்தெடுத்த
வணக்கத்துகுரிய மாணாக்கரே
எங்கெங்கோ உள்ளபோதும்
என் இதயத்தில் உள்ளீர்
உள்ளத்தைவிட்டு உதிர்கிறேன்
உங்களை நான் உயர் வரமென்பேன்
என் கைக்கடிகாரம் கழற்றி கறுவி
உங்கள் கன்னத்தில் மின்னிய
என் கைகளை ஒருமுறை பார்க்கிறேன்
எண்ணத்தில் உயர்ந்த நீங்கள் எழுதப்பட்டுள்ளீர்கள்
மடக்கை மனனத்தில்
தடக்கிவிழுந்த உங்களுக்கு
இடக்கை வலக்கை என்று
என் பிரம்பால்
தழும்புவர தாக்கியதும்
பின் ஓடிவந்து நீங்கள்
சேர் என்றழைக்க என் மனம் இளகியதும்
ஏன் அடித்தேன் என்று
இருத்திவைத்து உங்களுக்கு
மனம் திறந்து பேசியதும்
கடைசிவரை உங்கள்
தாயும் தந்தையும்
சேர் உங்களை நம்பித்தான்
இராப்பகலாய் இவர்களுக்காய்
ஓடாய்த்தேய்கிறோம்
அடித்தாலும் உதைத்தாலும்
ஏன் என்று கேட்கோம்
உருப்படியாய் இவர்களை
உய்வித்தால் போதுமென்பதும்
இப்பொழுது நினைத்தால் இனிக்கிறது
எப்பேற்பட்டது அந்த உறவு
காக்கட்டையில் என்னை காணும்போதே
தெருவில் ஒதுங்கி நின்று
வணக்கம் சொன்ன வளர்ப்பினில்
இன்று உங்களை வைத்தியனாய்
வாத்தியாராய் எக்கவுண்டன் எஞ்சினியராய்
சிந்தனை செயற்பாட்டாளராய் காணும்போது
வேளைக்கே நான் வாத்தியாராயும்
நீங்கள் மாணாக்கராயும் இருக்க வாய்த்தது
இப்பிறவி அதிஸ்டம் என்பேன்!

No comments:

Post a Comment