Wednesday, July 6, 2016

சுயநலம்



மெல்லிடையாளாய் உனைக்கண்டேன்
மழை மேகத்திரள் போல
கன்னியுன் கூந்தலுக்கு
ஓர் கவிதை சூடவும்
ஏனோ மனம் ஒப்பவில்லை
வெண்ணிலவாக்கி உன் விழியில் நீந்தும்
எண்ணிலா மீன்களுக்கும்
ஏனோ நான் வலை வீசவில்லை
விண்ணிலா மண்ணிலா நீயுதித்தாயென
ஒரு வினாக் கூட நான் எழுப்பவில்லை
இன்பநாள் அருகி
ஏறுபோலொரு காளை பற்றி
தேனிலா காணும் திகட்டாத
நாள் பொழுதில்
இணையராகி நெருங்கி
நீ திரிய கண்டுநான்
உனை கடுகளவும் நினைத்தில்லை
இன்று நான் உனக்கு எழுதுகிறேன்
ஏன்
அது சுயநலம்தான்
முந்தநாள் உன் மேனி
முன்னே பெருத்து
முகமும் கொஞ்சம் மொளுமொளுத்து
சொன்னதுபார் சேதி
கர்ப்பமாய் இருக்கிறேன் என
கரம் பற்றியவனுக்கில்லா எழுச்சி எனக்கு
மெல்லமாய் நட
உள்ளத்தில் நல்ல உவகை கொள்;
கள்ளமாயும் கனக்க சாப்பிடு
முடிந்தால் பொன்னியின் செல்வனை
கொஞ்சம் புரட்டிப்பார்
பூவரசம் பூவை ரசி
சங்கிலியன் தோப்பு பக்கம் போய்வா
பாரதியின் பாடல்கள் கேள்
கணணியில் இருந்து விளையாடு
என்னவோ எனக்குத் தெரியாது
உன்னை நான் இப்பொழுது
பெண்ணென்று நினைக்கவில்லை
எம் மண்ணை நிரப்பப்போகும்
நல்ல மழையென பார்க்கிறேன்
நல்ல தமிழ் பிள்ளை பெற்றுத்தா
பெற்றுத்தா பெற்றுத்தா பெற்றுத்தா!

No comments:

Post a Comment