Sunday, July 17, 2016

வல்லாரை




மரக்கறி வாங்க
மனுசி அனுப்பி விட்டாள்
மதாளித்த கீரை
மனசுக்கு விருப்பம்
விசாரித்துப் பார்ப்போமென
வீற்றூட் கரட் கத்தரிக்காய்
முள்ளங்கி வெங்காயம்
வாங்கோ வாங்கோவென
வரிசையாய்
அழைத்த குரல் கேட்டு
அங்கு போய்
வெண்டைக்காய் தக்காளி கரட்
கையிலெடுத்து
நல்லதோ என்றேன்
என்ன கதையிது
எல்லாம் தம்புள்ள
தரம் என்றான் நம்மாள்
முந்தி ஒரு காலத்தில்
முத்தவெளியில் கூடும்
சனி புதன் சந்தையிலே
தென்னக்கோன் லொறியில் வந்து
கப்பல் மொந்தன் கதலி
கறிமிளகாய் கத்தரிக்காய்
என்ன விலை முதலாளி
இறக்கி தாங்க விலையை
எல்லாத்தையும் ஏத்திறமே
என்றுதானே நின்றார்
பவளத்தின் தோட்டத்தில்
படைபடையாய் காய்த்து
பாகற்காய் கூட
முன்பொரு கால் இனித்ததெனக்கு
இன்றென் இதயத்தில் ஏதோ வலி
சந்தை வாசலுக்கு வந்து
எங்கள் வாய்க்காலோரத்திலும்
வயற் கரையிலும்
தேடித்திரிந்து பிடுங்கி
பிடியாய் கட்டி
காலை முதல் காய்கின்ற
காது கிழிந்த கிழவியிடம்
வாங்கினேன்
இரண்டு பிடி வல்லாரை
இன்று நம் பொருளாதாரம்.

No comments:

Post a Comment