Sunday, July 17, 2016

கடை


காற்றுக்கடை ஒன்று திறந்தேன்
நல்ல வியாபாரம்
வரிசையில் நின்று
வாங்கினர் புயற்காற்று
இன்னும் பல நூறு ஓடர் செய்துள்ளது
புயற்காற்றுக்குத்தான்!
ஒரு பதினாறு பதினேழு பருவங்கள் சில
தென்றல் காற்று வாங்கிச்சென்றன
வயற்காற்றின் விலையை
ஒரு சில விசாரித்துச்சென்றுள்ளன
டயானாவின் கூந்தலை வருடிய காற்று
கிளியோபற்றாவின்
கன்னத்தை தொட்ட தென்றல்
நயன்தாராவின் புன்னகையில் குளிர்ந்த காற்று
சமந்தாவின் துப்பட்டாவை தீண்டிய காற்று
எமி ஜாக்சனின் இடையை தழுவிய காற்று
ஆஸ் மலைக்காற்று
இப்படியும் கேள்விகள் தொடர்கின்றன.
நீண்ட நேரம் துலாவி விட்டு
காந்தி பெரியார் சேகுவராவின்
கடைசி மூச்சிருக்கா என கேட்டு
எங்காவது ஒன்று
அடிப்பெட்டிகளை கிளறவைக்கின்றன
ஒரு பக்கத்தில்
மணலாற்று காற்று
கோணமலைக்காற்று
இரணைமடுக்காற்று
கற்சிலைமடு காற்று நந்திக்கடல் காற்றையும்
அடுக்கி வைத்து காத்திருக்கின்றேன்
புதிய காற்றொன்றை நோக்கி.....

No comments:

Post a Comment