மாம்பழத்துக்கு மல்லுக்கட்டினாய்
முன் கோபம் உனக்கு
சுள் என்று மூக்கில்
கோபித்தாய்
மயிலேறிப் பறந்தாய்
மானஸ்த்தான் நீ
புலுடாக்கள் உனக்கு பிடிக்காது
உலகை சுற்றிக் காட்டினாய்
ஓர்மத்தொடு
கோவணாண்டியாய்
கிழவிக்கு தோன்றினாய்
பாடப்பெற்றாய்
பரவசமாயிருந்தது
இயல்பான குணங்களுடன்
உன் இயற்கை
எல்லோருக்கும் பிடித்திருந்தது.
முதலாம் புலிகேசி நீ
சுட்டபழம் சுடாத பழம் தந்த
முதலாம் வடிவேலு
இடைக்கிடை யார் துன்புற்றழைத்தாலும்
தலைமை தாங்கி தளபதியாகி
களமாடுவாய் தோழர் சே போல
அதுவரை எல்லாம் நலம்
உன்னை நம்பினேன்
நேற்றோ
உன் திருமுகத்தை
கையேந்திகளின் தேசத்தில்
பட்டுப் பீதாம்பரத்துள்ளும்
கொட்டிக் கிடந்த
தங்க நகை சாத்துப்படிக்குள்ளும்
தேடிக் கண்டு பிடிக்க பட்டபாட்டில்
ஒரு பணக்கார கந்தசாமி
பாடப்பெற்றான்
No comments:
Post a Comment