Saturday, January 14, 2017

இலச்சுமி

மட்டற்ற மகிழ்ச்சி
மாடு வாங்கினார்
முன்னொருநாள்
மயில்வாகனத்தார்
கொட்டிலிட்டார்
குளிருக்கு நெருப்பிட்டார்
கட்டாக புல்லுவெட்டி
கொக்கை கட்டி
பக்கத்து வேலியிலும்
பதம்பார்த்து
குழை கட்டி
புண்ணாக்கு கஞ்சியென
பொழுதெல்லாம்
அம்மாட்டுக்கு
கைத்தீன் கவனிப்பு
கன்னிமாடு
கத்தத்தொடங்க
கட்டியிழுத்துப்போய்
பட்டி நான்பன்னொன்றுடன் பழகவிட்டார்
எட்டுநாள் கழிய
.இளைத்துப்போன மாட்டை
தட்டிக்கொடுத்து
தலைப்பிரசவ நாளை கனவுகண்டு
வீடு கொண்டு வந்து
கன்று தாய்ச்சியென்று
நின்று கவனித்தார்
பட்டிப்பொங்கலுக்கு
நெற்றியில் ஒரு பொட்டும்வைத்து
நெகிழ்ந்தும்போனார்
மாதமாகி
மாடு கன்றீன
நேத்தியும் வைத்தார்
நினைத்ததுபோல்
யாவும் நலம்
அனுபவஸ்த்தர் துணையோடு
கடும்பு கறந்து
காய்ச்சிபரிமாறி
காலைமாலை இனி
கறந்துகொடுத்து
பலனை பெறலாமென
பக்கத்தாரோடு
பால் கொடுக்கப்பேசி
அன்றோர் காலை
அகன்றவாய் செம்புடன்
குந்தியிருந்து
கொழுத்த முலையில்
குளிர்ந்த நீர் தெளித்து
பற்றியிழுக்க
படாரென்று காலடி
பல்வரிசைப்பக்கமாய் விழ
குப்புற விழுந்து செம்பு
குத்திக்கரணமடித்தடங்க
திட்டியபடி எழுந்து
எட்டிநின்று
வெட்டுறவர் கையில் கொடுப்பேன்
விற்றுவிடுவேன் என
வெருட்டிபின்
முட்டியமாட்டுக்கு
முக்கால்வாளி புண்ணாக்கு வைத்து
முதுகை தடவி
இலச்சுமி என அன்போடழைத்து
மெல்ல முலையில்
மூன்றுவிரல் பிடித்து
கள்ளமாட்டை வளைத்து
கறந்தார் சொம்புநிறைய பால்
இன்றவர் பட்டியில்
இலச்சுமி புவனா பூமணி
இன்னும்பல
கத்தினால் விட
கறுத்த நான்பனொன்று
மட்டற்ற மகிழ்ச்சி மயில்வாகனத்தாருக்கு
நமக்கும்தான்!

No comments:

Post a Comment