Saturday, January 14, 2017

முற்றம்?

எட்டுக்கோடு கிளித்தட்டு
கிட்டிப்புள்ளு
ஒப்புச்சொல்லி
இழுபறிப்படும்
இனிய வட்டக்கிளிப்பு
வனிதையரின் கெந்திக்கோடு
கள்ளன் பொலிஸ்
கண்ணைப்பொத்தி
கிண்ணைப்பொத்தி இதுயார்
மரம்மட்டை மாமரம்
மல்லிகைப்பந்தல்
மாமியின் சேலைக்குள் ஒளிந்து
கூவென தேடும் ஒளிச்சுப்பிடிச்சு
எல்லாம் போச்சு
முற்றம் காலையில் இருப்பதுபோல்
கால்படாமல்
மணல்அளைந்து சுவடின்றி
மனம் மகிழ்ந்த கால்களின்றி
அந்நாளை மறந்து
ஆளில்லா வீடுபோல
அரவமற்று கிடக்கிறது
கூடியிருந்து உள்ளே
குமர் கிழவி பூட்டன்
ஆத்தை அப்பு
அத்தை சித்தி சித்தப்பு
ஈசிச்செயரால் ஒன்று
இடுப்பைபிடித்து ஒன்று
சுவரில் சாய்ந்து ஒ;ன்று
சுருட்டு பத்தி ஒன்று
உடும்பு பிடித்து ஒன்று
உச்சா போவதுபோல் ஒன்று
கட்டிலில் கிடந்தபடி ஒன்று
காலை பிளந்தபடி ஒன்று
கடைவாயில் வழிந்தோட
வக்கணை ஓப்பாரிகள்
வாள்வெட்டு வஞ்சனைகள்
மேக்கப்பில் சிந்துகின்ற
றெடி ரேக் கண்ணீரை
அண்ணாந்து நம்பி
அடுத்தபாக ஆவலுடன்
உறங்கப்போகிறது
ஊரெல்லாம் புகுந்து
யாரோ உழுகிறார்
ஏதோ விதைக்கிறார்
பாழ் பட்ட நிலம்
பட்டும் திருந்தவில்லை.
நான் யாரிடமும் பேசவில்லை!!


மரணங்களுக்கும் மரணங்களுக்குமான உரையாடல்
தொடரும் விநாடியில்
உயிர்கசியும் ஏக்கத்துக்கும் உயிர்கசியும் ஏக்கத்துக்குமான சந்திப்பு
சிதறுண்ட குழந்தைகளின்
பிஞ்சு விரல்களுக்கும் பிஞ்சுவிரல்களுக்குமான கைகுலுக்கல்
தான்யாவின் குடும்பத்தில்
தான்யாவைத்தவிர எல்லோரும் மடிந்துவிட்டார்கள்
இறுதிச் செய்தி ஸ்ரலின்கிராட்டில் இருந்து முள்ளிவாய்க்காலிற்கு
முள்ளிவாய்க்காலில் இருந்து அலப்போவிற்கு....
முன்னெப்போதும் அறியப்படாத முள்ளிவாய்க்கால்
முன்னேப்போதும் அறியப்படாத அலப்போ
உலகின் சக மனிதர்களுக்கு
ரத்தஆற்றாலும் உயிர்கள் கொட்டுண்ட நிலத்தாலுமே
அறியப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி உடையவர்களே
உங்கள் முகங்களினால் ஆன இந்த உலகத்தில்
ஒரு குழந்தையின் ஒரு நூற்றாண்டு கால மூச்சை
பனிமலைகள் இடையேயும்
பாலைவனங்களிடையேயும்
நதிக்கரைகளிலும்
கைகோர்த்து இடைதழுவி அணைத்து
ஓடித்திரிந்து ஒட்டிவைக்கும் காதல் இதயங்களை
பூமியை குளிர்விக்கும் மாயவிரல்களை
இதுவரை பார்த்திராத
ஆச்சர்ய கோல்களை உதைக்கப்போகும் பாதங்களை
உங்கள் பிள்ளைகளின் பிரியமான நண்பர்களை
நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டளைகளால் கொன்றுவிட்டீர்கள்
வாழ்கிறவர்களுக்காக வணங்கப்படுகின்ற கடவுள் போல்
இறந்தவர்களுக்காக வரும் கடவுள்
இரக்கமுள்ளவனாக இரக்கமாட்டான்
மரங்களும் கட்டிடங்களும் மின் ஒளிச்சாரல்களும் நிறைந்து
நந்திக்கடலோரத்தில் ரம்மியமாக மாறியிருக்கும் இயற்கை
எதுவும் நடவாததுபோல
முளைத்திருக்கும் காட்சிகள்
அலப்போவிலும் நடந்தேறும்.....
அலப்போ என பெரிய எழுத்தில் கரும்பச்சை நிறத்தில்
ஒரு வரவேற்பு பலகையை நட்டுவையுங்கள்
எப்போதாது நான் வரும்போது
ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்
கைப்பற்றப்பட்டவை
வெற்றிக்கொள்ளப்பட்டவை
எல்லாவற்றையும் அலப்போ வரும் வழியில்
எங்காவது காட்சிக்கு வையுங்கள்
மனதாபிமானத்துக்கான யுத்தத்தை விளக்கமளியுங்கள்
ஏன்சாகுறோம்
எதற்கு சாகிறோம்
எதனால் சாகிறோம்
என்று தெரியாமலே
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்
எத்தனை இலட்சம் உயிர்கள்!!
எல்லோரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்
அலேப்போ பற்றி யாரிடமும் நான் பேசவில்லை!!!
நெற்றியில் சரிந்துவிழும்
முடிகளை கோதிவிட்டு கோதிவிட்டு
சின்னவயசில்
கூட்டவும் கழிக்கவும்
மனசுக்குள் வைத்து தொடங்கி
பத்துக்கும் பத்தெடுக்கவைத்து
ரீச்சரிடம்
வெரி குட் வாங்கித்தந்த விரல்கள்
இப்போதும்
தலைகோதிவிடும் பழக்கமுடைய எனக்கு
நரைகளின் கணக்கை சொல்லாமல்
எப்பொழுதும் பிழை விடுகின்றன
வெரிகுட் !
ஏற இறங்க நூறு

அவசரமாய் அலுவலொன்று
அழைப்பொன்றில் வந்துவிட
யாழ்ப்பாண வசு பிடிக்க
வசுதரிப்பில் போய் நிற்க
காலடியில் கறிச் சென்று
கண்டியூர் பக்கமாக
வந்ததொன்று பாட்டும்
கேட்டிணுமாய் படிவரையும்
கூட்டமுமாய்
கைநீட்டி வாஞ்சையுடன்
கூறுங்கள் யாழுக்கோ
வாருங்கோ ஏறுங்கோ
படியடியில் தொங்குகின்ற
பையனின் பல்வரிசை
இடிபடும் சனத்துக்குள்
இடியப்பமாய் சிக்குண்டு
எதுவரைக்கும் போவதுநான்
முடிபறக்க பாய்கின்ற
முழு இறாத்தல் வசுவுக்குள்
அடிவயிற்றில் நோவெடுக்கும்
என நினைத்தும் அவசரமே
என்றெண்ணி
அதன் படியில் கால்வைக்க
சாவச்சேரியில்
விதிவந்து விபத்தாகி
பதின் உயிர்கள்
பறந்துவிட்ட
கதிகலங்கும்
சேதி மீண்டும்
இடிபோல நெஞ்சில்
சடுதியாய் எழுந்து நிற்க
இருவிழிபிதுங்கி என்
ஈரல்வரை கிடுகிடுக்க
முறிகண்டிப்பிள்ளையாரை
முதலாவதாய் வேண்டிக்கொண்டேன்
முந்துகின்ற வசு ஒவொன்றும்
முடிவெழுதும் வேளைபோல்
பிள்ளைகுட்டிகளை பேரன்பு
மனுசியினை என்னுள்ள
எண்ண வைக்கும்
மடுமாதா மனசுக்குள்
பளைவரையும் இந்த
உயிர்படும்பாடு ஒன்றரிரண்டா
அங்கும் கொஞ்சம்
அள்ளி அடைந்து
ஆலப்போல் வேலப்போல்
ஆலம்விழுதுபோல்
மாமன் நெஞ்சில்
பாட்டுப்போட்டு
பாச நெஞ்சு பரிதவிக்க
பம்மிங்கில் ஏற
பதகளிப்பட்டு
அங்கங்கங்கு பிடித்து
முன்னால குனிஞ்சு
முகப்புக்கண்ணாடியால்
முகவரியை பார்க்க
விண்ணால இறங்கி
விசுக்கென்று வந்ததுபோல்
சன்னலோடுரசி சறுக்கியொன்று
போகும்போது
உச்சிலடி அம்மனை
ஊரிலுள்ள பிள்ளையாரை
நல்லூர் கந்தனை
நான் நினைந்துருகி நின்று
நாவற்குழி தாண்டும்போது
சுண்டல் காரனோ சுடச்சுட என்கிறான்
அண்ணல் நான்படும்
அவஸ்த்தைகளை
சுண்டலே நீயறிவாயா
ஏற இறங்க காசு நூறுதான்
பத்திருபதாயிரத்துக்கு நேத்தி
செத்துப்போய் நான்
வசு ஸ்ராண்டில் இறங்குகையில்
றைவர் முகம் பார்த்தேன்
அது இறைவர் முகம்தான்!!
முள்ளிவாய்க்காலை மறக்காதே
அலப்போவை மறக்காதே

எந்த வல்லரசின் தூதர்களின்
முதுகிலும்
யாரும் சுட்டதாய் ஞாபகம் இல்லை
தமிழீழத்தை மறக்காதே
முள்ளிவாய்க்காலை மறக்காதே
துப்பாகியுடன் எவரும்
தொண்டையில் நீர்வற்ற
உலகத்தின் மூலைவரை குரல் கேட்க
கத்தியதாக குறிப்புக்கள் இல்லை
தூதர்கள்
புகைப்படக்கண்காட்சிகளில்
சுதந்திரமாக பயங்கரவாதம் பற்றி
பேசிக்கொண்டிருந்தார்கள்
எல்லா விருந்துகளிலும் மகிழ்ந்திருந்தார்கள்
அவர்கள் எல்லோருக்கும் முதுகில்
புளுப்போல மரணம் ஊர்கின்ற
திகிலான அனுபவ நாட்கள் ஏற்படவில்லை
தங்கள் மெய்ப்பாதுகாவலர் பற்றிய பூர்வீகங்களை
அவசரமாக தேடி தேடி
தூக்கம் தொலைந்த இரவுகளை
அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் பரிசளித்ததாக
எந்த கவிதைகளும் இல்லை
தனது வாகன ஓட்டுனர்
வாயிற்காவலர்
நம்பிக்கையான முடி திருத்துனர்
சமையற்காரர்
எல்லோர் மீதும்
ஒருவனின் முகமே படிந்திருந்திருப்பதுபோல
மரண பிரம்மையை
எவரும் கொடுத்திருக்கவில்லை
ஆயினும்
முள்ளிவாய்க்காலில்
பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாக
உலகத்திற்கு பிரகடனம் செய்யப்பட்டது
அலப்போவை மறக்காதே
சிரியாவை மறக்காதே என்றபடி
துப்பாக்கி ஏந்தி
இருபத்திரண்டே வயதானவன்
அமைத்த மரண களரி
இறந்தவர்களுக்கான கடவுள்
இரக்கமில்லாதவன் என்கிறதா
ஒரு குழந்தையின் மரணத்தில் எழுந்த
மானுட நேயம் என்பதா
தன்னினம் மடிகிறபோது
எங்கிருப்பினும் எவனொருவனும்
எதையோ செய்வான் என்பதா
முடிவாக
கைகட்டி வாய்பொத்தி
தலைகுனிந்து நின்று
வல்லரசு சொல்கிறது
அது ஒரு பயங்கரவாதத்தாக்குதல் என்பதை
எல்லா ஓட்டைகளாலும் உள்வாங்கிக்கொண்டு
உறங்கி இருளிலேயே எழுவதா!!
நண்டுகளாய் நடனமாடியும்
மீள்களாய் துள்ளியும்
வெண்நுரைகளாய் பூத்துக் குலுங்கியும்
அந்திப்பொழுதில்
பரிதியுடன் கலந்து
சித்திரங்கள் நூறு வரைந்தும்
வெண்நிலவின் நிழல் ஏந்தி
நீல தேவதையாய்
விடியவிடிய அருகிருந்தும்
அம்மாவின் மடியாய்
அப்பாவின் தோளாய்
தாய் மாமனின் செல்லமாய்
அழுகையை ஆற்ற
கடலே
நீ இத்தனை ஆண்டுளாய்
தவிக்கிறபோதும்
வலம்புரிச்சங்குகளாய்
சிப்பிமுத்துக்களாய்
நிலைத்திருந்த எங்கள் புன்னகைமீது
அந்தக் காலையில்
அத்தனை பொறாமையும்
ஆசையும் நீ ஒரு போதும் கொண்டிருக்கக்கூடாது
அதற்குப்பிறகு
அம்பாப்பாடல்களில்
உனது துரோகமும் இழையோடுகின்றது
நீ காவிச்சென்ற
நத்தார் பண்டிகையில்
மணலில் விளையாடிக்களைத்து
நல்ல தூக்கத்தில் இருந்த
மழலை பிறின்சி
புதுவருடத்திற்கு மருன் வர்ணத்தில்
ஒரு புது சுடிதார் வாங்கி வைத்திருந்தாள்
றீற்றாவுக்கு
திருமணம் நிச்சயமாகியிருந்தது
பேராளி சமரழகி
விடுமுறையில் அம்மாவிடம் வந்திருந்தாள்
நிக்சனுக்கு பல்கலைக்கழகம் கிடைத்திருந்தது
சம்மாட்டியாரின் மருமகள்
தலைப்பிரசவத்திற்கு தயாராக இருந்தாள்
பெட்டகப்பேச்சு

மாலை தேனீரை மசமசப்பு தீர்ந்துவிட
மடியில் வைத்தபடி
வடையில் ஒரு கடியும்
மாண்புமிகு துணையாளின்
சீனி தணித்த
சிக்கனத் தேனீரின் குடியும்
படியில் இருந்தபடி
பழைய பத்திரிகை சிலதை
முதிரைப்பெட்டகத்தின்
முதல் கதவை முக்கித்திறந்து
தட்டியிழுத்து தடவியெடுத்து
பத்திரப்படுத்திய பரவசத்துடன்
பக்கத்தில் நின்ற
பாசத்துணையை பார்வையால் துளாவி
பக்கங்கள் சிலதை திறக்க
பால்ய நினைவுகள்
வெட்கத்தில் அவள் விறாந்தையில் அகல
சித்திரம்போலொரு வாழ்வை
சீக்கிரம் தொலைத்தது தெரு
சின்ன வயதில்
பட்டுக்கோட்டை எனக்கு
பாட்டெழுதும் கவி
கல்யாணசுந்தரத்தின்
கொட்டும்;சிந்தனையால் அறிமுகம்
எட்டயபுரம் கூட
அப்பெருங்கவி ஆற்றலில்தான்
மட்டுநகர் விபுலானந்தரின்
வித்தகத்தில்
பண்டாரவன்னியனால்
கற்சிலை மடு
கட்டையில் போனாலும்
கரியிலும் மறவாது
ஆழிக்குமரனால்
அலைதழுவும் ஊரொன்று
அண்ணன் பிரபாகரனால்
வல்வெட்டித்துறை
வல்லமை தவில் தட்சணாமூர்த்தியால்
அளவெட்டிபதி
அந்நாளில் உள்ளத்தில்
அறிமுகம் ஆனது
விக்டரால் அடம்பனும்
வீரி மாலதியால் ஆட்காட்டிவெளியும்
மில்லரால் நெல்லியடியும்
உள்ளத்தில் கரைந்ததுகாண்
சொல்ல வெட்கம் இன்று
கசிப்பால் சில ஊர்கள்
கஞ்சாவால் சில ஊர்கள்
கற்பழிப்பால் சில ஊர்கள்
வாள்வெட்டில் சில ஊர்கள்
இனிவரும் சந்ததிக்கு
இந்த நாள் பத்திரிகை
எடுத்துப்போகிறது.
வடக்கரசின் அடிபிடியால்
கைதடியும் கூட
தடுக்குப்பட்டு தலைகுனிந்து
தலைப்புச்செய்தியாகிறது.
இந்நாள் பத்திரிகையை
எடுத்து வைத்து பெருமைகொள்ள
இனி எனக்கு முடியாது
எடடி ஒரு நெருப்பெட்டி
கடந்த ஆறாண்டு
தொந்தி பந்தியோடு
அந்திவரை வாசிக்க
அகன்று விரிந்து வந்து
மந்து பற்றி கிடக்கும்
பத்திரிகைகளை
அக்கினிக்கு இரையாக்கு!!!
இருத்தல்

உடைந்து விழுகின்றன
பெருஞ்சுவரின் கற்கள்
இப்போது
உள்ளிருந்தே உதைக்கப்படுகின்றது
கட்டியவர்களும் சிக்குண்டனராம்
அவ்வப்போது இடுக்குகளினூடே
புறப்படும் இனிய கீதம்
சாமகானத்தின் உருப்படிகளை
தேடியலைகின்றது
அவ்வப்போது இடுக்குகளினூடே
நசியுண்டு பாயும்
ஒளி வட்டங்களின் கீற்று
ஸ்பரிசத்தால் துளிர்களை
நீவிவிடும் விடாயில்
வால்களின் தீப்பந்தம் அணைகின்றது
உள்ளிருந்துதைப்பில்
மலர்ந்திருக்கும் தாமரை
இதழ்களின் நடுவில்
பிரசவக்குழந்தையின் அழுகையில்
இரவின் நிறத்தில்
வாசத்தில்
வெண்மை பரவும் மல்லிகையில்
காத்திருக்கச் சொல்கிறது
உடைந்துவிழும் பெருஞ்சுவரின் கற்கள்
இலச்சுமி

மட்டற்ற மகிழ்ச்சி
மாடு வாங்கினார்
முன்னொருநாள்
மயில்வாகனத்தார்
கொட்டிலிட்டார்
குளிருக்கு நெருப்பிட்டார்
கட்டாக புல்லுவெட்டி
கொக்கை கட்டி
பக்கத்து வேலியிலும்
பதம்பார்த்து
குழை கட்டி
புண்ணாக்கு கஞ்சியென
பொழுதெல்லாம்
அம்மாட்டுக்கு
கைத்தீன் கவனிப்பு
கன்னிமாடு
கத்தத்தொடங்க
கட்டியிழுத்துப்போய்
பட்டி நான்பன்னொன்றுடன் பழகவிட்டார்
எட்டுநாள் கழிய
.இளைத்துப்போன மாட்டை
தட்டிக்கொடுத்து
தலைப்பிரசவ நாளை கனவுகண்டு
வீடு கொண்டு வந்து
கன்று தாய்ச்சியென்று
நின்று கவனித்தார்
பட்டிப்பொங்கலுக்கு
நெற்றியில் ஒரு பொட்டும்வைத்து
நெகிழ்ந்தும்போனார்
மாதமாகி
மாடு கன்றீன
நேத்தியும் வைத்தார்
நினைத்ததுபோல்
யாவும் நலம்
அனுபவஸ்த்தர் துணையோடு
கடும்பு கறந்து
காய்ச்சிபரிமாறி
காலைமாலை இனி
கறந்துகொடுத்து
பலனை பெறலாமென
பக்கத்தாரோடு
பால் கொடுக்கப்பேசி
அன்றோர் காலை
அகன்றவாய் செம்புடன்
குந்தியிருந்து
கொழுத்த முலையில்
குளிர்ந்த நீர் தெளித்து
பற்றியிழுக்க
படாரென்று காலடி
பல்வரிசைப்பக்கமாய் விழ
குப்புற விழுந்து செம்பு
குத்திக்கரணமடித்தடங்க
திட்டியபடி எழுந்து
எட்டிநின்று
வெட்டுறவர் கையில் கொடுப்பேன்
விற்றுவிடுவேன் என
வெருட்டிபின்
முட்டியமாட்டுக்கு
முக்கால்வாளி புண்ணாக்கு வைத்து
முதுகை தடவி
இலச்சுமி என அன்போடழைத்து
மெல்ல முலையில்
மூன்றுவிரல் பிடித்து
கள்ளமாட்டை வளைத்து
கறந்தார் சொம்புநிறைய பால்
இன்றவர் பட்டியில்
இலச்சுமி புவனா பூமணி
இன்னும்பல
கத்தினால் விட
கறுத்த நான்பனொன்று
மட்டற்ற மகிழ்ச்சி மயில்வாகனத்தாருக்கு
நமக்கும்தான்!

பள்ளி வயதில்
பயந்து பயந்து பார்த்த
அத்தனையும்
பின்னரான நாட்களில் 
காதலாய் கவிதையாய் வித்தையாய்
வீச்சாய் ஆயிற்று
நினைத்துப்பார்க்கும்போது
பாதி திறந்த சாளரங்களும்
கதவு இடைவெளிகளும்
எவ்வளவு அர்த்தமுள்ளவை
வதனி ரீச்சர்

வதனி கவனி
இதுவரை நீ வதனி
இனி
தடைதாண்டி
போட்டி பரீட்சை
விடைதாண்டி
வேலையற்ற
பட்டதாரியென்ற
பழி தாண்டி
படிப்பித்தல் நியமனத்தில்
படியேறுகின்ற ரீச்சர்வதனி
அரச நியமனங்கள்
ஆயிரம் இருந்தாலும்
ஆண்டவனுக்கு அருகில்
அமரும் அதிஸ்டம்
அம்மணி உனக்கு
காலை ஒன்பது மணிக்கே
இதுவரை தொடங்கிய உன் நாள்
நாளையிலிருந்து
அதிகாலை நான்கிற்கே ஆரம்பம்
பள்ளியெழுந்து நீ
அம்மாளாச்சி போலவே
தெருவில் இறங்கப்போகிறாய்
காலை வணக்கம் சொல்லியே
உன்னை ஒரு களங்கமற்ற கூட்டம்
சுற்றிவரத்தொடங்கும்
கைபற்றியிழுக்கும்
புன்னகை பூரிப்பு மௌனம் என
வெள்ளைச்சீருடைக்குள் தோன்றும்
பாசைகளையெல்லாம்
நீ மொழிபெயர்த்தாகவேண்டும்
வதனி கவனி
நேற்றுவரை நீவதனி
இன்று நீ ரீச்சர்வதனி
இனி நீ ஆயிரம் கண்களுக்குள் நடக்கிறாய்
காயதாய் இருக்கும் உன் காதல்கூட
கனியாது போகலாம்
காட்டுமல்லிகை போல
உன் சின்னக்கனவுகள்
வாசம் நுகரப்படாமலே
வாழ்ந்துமுடிந்தும் போகலாம்
ஆழமான உள்ளங்களின் கதவு
உனக்கு அகன்று திறந்திருக்கிறது
ஆங்கோர் உயர் பீடத்தில்
நீ ஓய்வு பெறும் போது
சூட்டுவதற்கான
மண்ணில் அழியா மகா கிரீடங்கள்
அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது
எல்லாவற்றின் முன்பும்
உன் கற்பித்தல் என்ற
கனவுப் பாதையில் நடக்கத்தொடங்குகிறாய்
அதிபரை கரைக்கும் மருந்து
ஆங்காங்கு வந்து
இடைக்குள் செருகும்
கற்களை அகற்றும் கைவசியம்
சேடிகளின் வாயால்
உன் சிறப்புரைக்கவைக்கும்
காட்டின் நடுவில் இருக்கும்
புற்றில் சீறுகின்ற
ராஜநாகத்தின் நவரத்தினகல்
எல்லாம் வரப்பெற்ற வல்லமையாகுவாய்
மருதோண்டிவைத்து
மகிழ்ந்திருந்த உன் உள்ளங்கை
வெண்கட்டி விளைந்திருக்கும்
கைதடுமாறி உன் கன்னங்களில் கூட
சின்னமாயிருக்கும்
எல்லாமே
எண்ணற்றோர் எதிர்காலத்தை
நீ தீர்மானித்துக்கொண்டிருப்பதன் அழகு
இனி
பச்சை இல்லமா மஞ்சள் இல்லமா
சிவப்பு இல்லமா உனது
உன் ஆடைக்கனவுகளில்
அரைவாசி நாளையோடு முடிகின்றது
இனிச் சேலைக்குள் இருந்தே
ஆயிரம் வானவிற்களுக்கு வர்ணம்
கொடுக்கப்போகிறாய்
சுற்றுலாவிற்கு உன்னை முதல்வர் அழைத்து
முற்றிலும் நீயே பொறுப்பென்பார்
அப்போதெல்லாம்
திருமணம் ஆகாமலே
திரும்பி வந்து இறங்கும்வரை
பத்து நல்லதங்காளாய்
இருநூறு பிள்ளைகளுக்கு
தாயாக மாறவேண்டும்
ஆயாவாயும் மாறவேண்டும்
கறுத்தப்புள்ளிகளின்றி உன் பயணமிருந்தால்
அடுத்துனக்கு ஆசனங்கள் தேடிவரும்
தடுட்தாட்கொள்கின்ற சந்தர்ப்பங்களும்
தானாக விளையலாம்
நீ படுக்கமுடியாது இனி
பாடவேளைகள்தான் கனவாய் வரும்
படபடப்பும் இருக்கும்
புதிதாயும் ஏதும் கொண்டு செல்லவேண்டும்
உலகப்புதினங்களை உற்றுநோக்கவேண்டும்
அல்வா எடிசன்கள்
ஆபிரகாம் லிங்கன்கள் அலெக்ஸ்சாண்டர்கள் பிரபாகரன்கள்
ஓசாமாக்கள் தெரேசாக்கள் டயானாக்கள்
மூன்று இலைகளோடு உன் முன்
வகுப்பறையில் வந்திருக்கும்
எல்லாவற்றுக்கும்
உன்னிடம் பதிலிருக்கவேண்டும்
ஊமையானால்
உள்ளத்தில் வழங்கப்பட்ட உனக்கான உயர்பதவி
மெல்ல மெல்ல அகற்றப்படும்
என்ன செய்யப்போகிறாய்
நேற்றுவரை நீ வதனி
இனி நீ ரீச்சர் வதனி
கன்ன மயிர் பழுத்து
கடைசிப்பெருங்காலத்துள் நுழைகின்ற
எந்தனது நெஞ்சில்
சங்கரப்பிள்ளை சோதிநாதன் விந்தன்
மனோகரி குமார் அருள்நேசன் சசிகலா சிவகௌரி
சிறீசெல்வராஜா மோட்சலிங்கம் கனகேந்திரம் என்றொரு பட்டியல் நீள்கிறது
இவர்கள் என் ஆசிரியர்கள் இன்னும் பலர்
பக்கங்கள் பலவற்றை அலங்கரிப்பர்
ரீச்சர்வதனி
உந்தனது காலத்தில்
எத்தனை உள்ளங்களில் உட்காரப்போகிறாய்!!
ஒரு உண்மை!!

சித்திரை நாள் குறித்து
சீர் வரிசை சரிபார்த்து
இக்கணம் இருந்துபேசி
இருவீட்டார் அழைப்பாக
பத்திரிகை அச்சேற்றி
பலருக்கும் போய்ச்சேர்த்து
பல காரச் சூடுவைத்து
பந்தலையும் வரவைத்து
பழக்குலையும் கட்டிவிட்டு
பம்பரமாய் சுழன்ற அசதி
பன்னிரண்டு நடுநிசியில்
பாம்படித்துப்போட்டதுபோல்
படுதூக்கம் சரித்துவிட
பந்தலுக்குள் சிலபேரும்
பத்தியில சில கிழடும்
பெண்புரசு அறைக்குள்ளும்
புரண்டு கண் செருகிவிட
நாலரைக்கு வைத்த அலாம்
நாலுபேரை எழுப்பிட
அறைக்குள் வெளிச்சம்வர
வேதியக்கை விறைத்துப்போனார்
விடிஞ்சால் மணத்துக்கு
வெளிக்கிடும் மல்லிகையாம்
மணவாட்டி நித்தியா
மாயமாய் காணவில்லை
கனகம் ஓடிப்போய்
கக்கூசை திறந்து பார்த்து
கருக்கலுக்குள் ஓடிப்போய்
கிணத்தடியை எட்டிபாத்து
ஓடிவந்து அலுமாரியை
ஓவென்று திறந்து பார்க்க
ஒரு உடுப்பும் அங்கில்லை
முத்தன் பெடி மோகனுக்கும்
பத்தன் மகள் இவளுக்கும்
முளைத்திருந்த காதல் பற்றி
முன்னூரில் முணுமுணுப்பு
முடிச்சுக்குள் இருந்ததுண்டு
கத்துகிறார் பத்தர் இப்ப
கனகத்தை திட்டுகிறார்
கொத்துவன் எல்லாரையும்
கொளுத்தவள் போய்விட்டாள்
சத்தியமாய் அவளெனக்கு
சரித்திரத்தில் மகளில்லை
இன்றோடு போச்சென்மானம்
இனியெல்லாம் அவமானம்
இது நடந்து வருசங்கள்
இற்றைக்கு இருபத்தைந்து
நேற்றைக்கு நெடுநாள்பின்
பத்தரை பார்த்தபோதவர்
வார்த்தைக்கு வார்த்தை
நித்தியா நித்தியாதான்
மருமகனும் தங்கமாம்
மறு பேச்சு பேசாராம்
மகள் பெற்ற பிள்ளையும்
மகா கெட்டிக்காரியாம்
தொப்பூள் கொடி பிணைப்பும்
தோள் சுமந்த அச்சுகமும்
எத்தனை ஆச்சர்யம்
எப்போதும் ஒரு உண்மை!!
நாட்டை பிடிக்காது போனோம் 
சரி 
நாளை 
மாட்டையாவது ....
நீ முப்படை கொண்டு களமாடினாய் என்று சொல்ல எதிர்காலம் அது ஒரு பொய் கற்பனை என்று நம்ப வேண்டுமாயின் இன்றைக்கு நீ காளையை அடக்குகிற வரலாறு பதியப்பட கூடாது அப்போது அன்றய ஏறு தழுவுதலும் கற்பனை ஆகும் ஒரு கோடி ஜல்லிகட்டை ஈழத்தில் நீ இழந்து விட்டாய் ! மொத்த தமிழனும் நுகங்களில் பூட்டப்பட்டு இருப்பது எனக்கு தெரிகிறது

Monday, December 19, 2016

சிறுத்தைகள் பணிந்த ஒரே ஒரு சிங்கம்















கண்ணோடு நிற்கின்ற
காலத்தின் உருவம்
நீ மண் வந்து போனாலே
நிம்மதி பிறக்கும்
விண்ணேறிக் கடந்து
வேதங்கள் சொன்னீர்
கண்ணீரில் எமைவிட்டு
ஏனய்யா போனீர்
முன்னின்று நீர் நடத்தும்
முழக்கத்தில் எதிரே
தன்னிலை தளர்ந்து
தடுமாற்றம் இருக்கும்
சிறுத்தைகள் பணிந்த
ஒரே ஒரு சிங்கம்
தேசத்தில் குரல்
அன்ரன் பாலசிங்கம்
வருத்தங்கள் உனை தின்ன
வானேறி வந்தீர்
தம்பி கரம்பற்றி அழைக்க
பாசத்தில் கரைந்தீர்
வருகின்ற வஞ்சக
சூழ்ச்சியை சொன்னீர்
இனி வரமாட்டேன்
சொல்லாமல் நெடும்தூரம் ஆனீர்
பரணிக்கு வழி சொல்லி
பக்கத்தில் இருந்து
நீர் பட்ட இன்னல்கள்
ஒன்றல்ல கோடி
தரணிக்கு எங்களின்
முகமாயும் இருந்தீர்
தலைமகன் இதயக்
குரலாயும் ஆனீர்
மரணம் பலமுறை
ஒத்திகை பார்த்தது
மலரும் தேசத்தை
பார்த்திட உயிர்த்தீர்
விலகும் பனியென
விதி நொந்து நின்றோம்
விடியல் கானலாய்
விடைபெற்றுபோனீர்
பூமி ரேகையில்
சாத்திரம் பார்த்தீர்
புலர்வுக்கு வழியிட
பூதலம் அளந்தீர்
புலத்துக்கும் நிலத்துக்கும்
புலரியின் தூதரே
நிலைத்தது நின்புகழ்
நீள் துயில் கொள்வீர்
தமிழர் தந்திரம் மந்திரம்
அன்ரன் பாலசிங்கம்
தமிழர் ராஜதந்திரி என்பது
உம் மங்கா நிரந்தரம்
வெள்ளைச்சியடலொடு
வேப்பமரக்காற்று
வேண்டிய நினதுளம்
நிச்சயம்
இங்குதான் எங்கேனும்
இளைப்பாறித்தூங்கும்

இன்று ஈழக்கவியரசு கவிஞர்புதுவை அப்பாவின் பிறந்த நாள்














எனக்கு கவிதை பிச்சை இட்ட பெருமானாரை
எப்படி நான் வாழ்த்துவேன்
உலைக்களம் உருக்கொள்ளவேண்டிய காலத்தில்
நீ இல்லையோ என்ற கேள்வி
நெஞ்சை கொல்லும் கவிதையே
புதுவை எனக்கு மதுவை ஊற்றியவர்
அதற்குள் நாவண்ணன் நெருப்பை ஊற்றி
நீறு பூக்க வைத்தவர்
புதுவை தந்த விரல்கள்
எப்போதும் வெட்டியாய் இருப்பதாய் தெரியவில்லை
விரல் விட்டு எவர்எவருக்கோ ஆட்டிக்கொண்டே இருக்கிறது.
தமிழை
காங்கிரீட் கலவை ஆக்காதவர் நீர்
மாசிப்பனியெனவும்
மார்கழி தூறல் எனவும்
காப்பணிந்த மகளிர்
களமேகிய வழியின் முத்துப்பரல்கள் எனவும்
பள்ளம் திட்டியென நெளிந்த வன்னி தெருக்களின்
கலவி மயக்கமெனவும்
தன் தலைவனை சாலையோரப்பூவரசின்
பூவில் பிசைந்து
காலத்தில் தீட்டிய மகரந்த வருடலெனவும்
காட்டியவன்
உன் தமிழில் எனக்கும் ஒரு கவளம் ஊட்டியவன்
உன் கர்வத்தில் ஒன்றாய்
உன் முற்றத்துப்பந்தலோரத்தில்
என்னையும் பதியமிட்டாய்
உன் காலடியில் இருந்து
கனவுகளை எடுத்துவைத்தேன்
வாங்கிப்பார்த்து
வகிடெடுத்து தலைசீவி
சிற்ப நுணக்கங்கள் பார்த்து
ஆங்காங்கு தொங்கிய குஞ்சங்களை அறுத்தெறிந்து
நெற்றியில் ஒரு பொட்டுவைத்து
உனக்கேயுரிய நக்கல் நளினங்களுடன்
என்னையும் பார்த்து
நீரும் வெளிக்கிட்டீரோவென
சிலாவி
கருணாகரனை அழைத்து
இதை வெளிச்சத்தில் இடுவென உரைத்த
தொண்ணூறுகளை மீண்டும் தொட்டு வணங்குகிறேன்
வாழ்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது
உங்களோடிருந்த
ஈரமும் எரிமலையுமான நினைவுகளுக்குள்
காலப்பாதையில்
கழிவு வாய்க்கால்களுக்கும் நடந்து
கடக்கவேண்டிய இத்தருணத்தில்
சாக்கடைப்புளுக்களின் படங்களையும்
இடைச்செருகி இடைஞ்சல்படுகிற இடர்பாடு
வெடியும் மருந்துமான வெள்ளையுள்ளங்களோடு
கவிதை வேள்வி செய்தாய் நீ
நானோ நடிகர் திலகங்களுக்கு மத்தியில்
அடிக்கடி என் மீதும் ஒட்டிக்கொள்கின்ற
அரிதாரங்களை தட்டி ஊதி தடுமாறுகிறபோது
உன் பாதிக்கவிதைதான் வருகின்றது
மீதி ஒரு விசரனின் விடியலுக்கான விஸ்வரூபமாகின்றது
நல்ல வேளை நீ இல்லை என் பிதாவே
இருந்திருந்தால்
நீ அன்று உலைக்களத்தில்
தம்பி விம்மி அழுகிறாள் ஈழத்தாய்
இன்றுன் வேலைகளை ஒதுக்கி
வெளிக்கிட்டுவா
விடுதலைத்தேரின் வடத்தில்
நீயும் ஓர் இடம்பிடி நாளைக்காயென்று
நாரி வலிக்க எழுதி அழைத்தபோது
ஊருக்குள் சேலைக்குள் ஒளித்திருந்த
செட்டியார்கள் எல்லாம்
இன்றுனக்கு பொற்கிழியும் பொன்னாடையும் அளிக்க
இதயம் கருகியிருக்கும் உனக்கு
தப்பிவிட்டாய் கவித்தலைமகனே!
வாழ்க நின் புகழ்

நான் யாரிடமும் பேசவில்லை!












மரணங்களுக்கும் மரணங்களுக்குமான உரையாடல்
தொடரும் விநாடியில்
உயிர்கசியும் ஏக்கத்துக்கும் உயிர்கசியும் ஏக்கத்துக்குமான சந்திப்பு
சிதறுண்ட குழந்தைகளின்
பிஞ்சு விரல்களுக்கும் பிஞ்சுவிரல்களுக்குமான கைகுலுக்கல்
தான்யாவின் குடும்பத்தில்
தான்யாவைத்தவிர எல்லோரும் மடிந்துவிட்டார்கள்
இறுதிச் செய்தி ஸ்ரலின்கிராட்டில் இருந்து முள்ளிவாய்க்காலிற்கு
முள்ளிவாய்க்காலில் இருந்து அலப்போவிற்கு....
முன்னெப்போதும் அறியப்படாத முள்ளிவாய்க்கால்
முன்னேப்போதும் அறியப்படாத அலப்போ
உலகின் சக மனிதர்களுக்கு
ரத்தஆற்றாலும் உயிர்கள் கொட்டுண்ட நிலத்தாலுமே
அறியப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி உடையவர்களே
உங்கள் முகங்களினால் ஆன இந்த உலகத்தில்
ஒரு குழந்தையின் ஒரு நூற்றாண்டு கால மூச்சை
பனிமலைகள் இடையேயும்
பாலைவனங்களிடையேயும்
நதிக்கரைகளிலும்
கைகோர்த்து இடைதழுவி அணைத்து
ஓடித்திரிந்து ஒட்டிவைக்கும் காதல் இதயங்களை
பூமியை குளிர்விக்கும் மாயவிரல்களை
இதுவரை பார்த்திராத
ஆச்சர்ய கோல்களை உதைக்கப்போகும் பாதங்களை
உங்கள் பிள்ளைகளின் பிரியமான நண்பர்களை
நீங்கள் உங்களுக்கு பிடித்த கட்டளைகளால் கொன்றுவிட்டீர்கள்
வாழ்கிறவர்களுக்காக வணங்கப்படுகின்ற கடவுள் போல்
இறந்தவர்களுக்காக வரும் கடவுள்
இரக்கமுள்ளவனாக இரக்கமாட்டான்
மரங்களும் கட்டிடங்களும் மின் ஒளிச்சாரல்களும் நிறைந்து
நந்திக்கடலோரத்தில் ரம்மியமாக மாறியிருக்கும் இயற்கை
எதுவும் நடவாததுபோல
முளைத்திருக்கும் காட்சிகள்
அலப்போவிலும் நடந்தேறும்.....
அலப்போ என பெரிய எழுத்தில் கரும்பச்சை நிறத்தில்
ஒரு வரவேற்பு பலகையை நட்டுவையுங்கள்
எப்போதாது நான் வரும்போது
ஒரு செல்பி எடுத்துக்கொள்கிறேன்
கைப்பற்றப்பட்டவை
வெற்றிக்கொள்ளப்பட்டவை
எல்லாவற்றையும் அலப்போ வரும் வழியில்
எங்காவது காட்சிக்கு வையுங்கள்
மனதாபிமானத்துக்கான யுத்தத்தை விளக்கமளியுங்கள்
ஏன்சாகுறோம்
எதற்கு சாகிறோம்
எதனால் சாகிறோம்
என்று தெரியாமலே
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்
எத்தனை இலட்சம் உயிர்கள்!!
எல்லோரும் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்
அலேப்போ பற்றி யாரிடமும் நான் பேசவில்லை!!!

வெரிகுட் !

நெற்றியில் சரிந்துவிழும்
முடிகளை கோதிவிட்டு கோதிவிட்டு
சின்னவயசில்
கூட்டவும் கழிக்கவும்
மனசுக்குள் வைத்து தொடங்கி
பத்துக்கும் பத்தெடுக்கவைத்து
ரீச்சரிடம்
வெரி குட் வாங்கித்தந்த விரல்கள்
இப்போதும்
தலைகோதிவிடும் பழக்கமுடைய எனக்கு
நரைகளின் கணக்கை சொல்லாமல்
எப்பொழுதும் பிழை விடுகின்றன
வெரிகுட் !

Saturday, November 19, 2016

தூவான விரல்களால் மீசை முறுக்கும் கார்த்திகை!!



















முற்றத்திலே முகம்புதைத்திருக்கும் மழையை
கொஞ்சம் வருடிவிடுகின்றேன்
முந்தாமல் பிந்தாமல்
இம்முறை நெருக்கமாய்
அற்புத நடனமாடி என்னை ஆசுவாசப்படுத்துகின்றது
முன்னைப்போல
கொடுப்பதற்கு ஒன்றுமில்லை
மழைக்கும் தெரியும்
பாரிநிலம் பாழடைந்து போகிறது
சுப்பர் மூனை பிடித்தேன்
கைகுலுக்கி அனுப்பிவைத்தேன்
மழையே நீ அப்படி அல்ல
என் ஆழ் மனதறிந்த தேவதை
என் மயிர்க்கால்களை தொட்டு
செல்லமே என்று தீண்டும் உரிமை நீ
என் பதிகங்களுக்கு அடியெடுத்துக்கொடுக்க
எந்தக்கடவுளும் வருவதில்லை
பித்தா என்று தடுத்தாட்கொண்டதுமில்லை
மழைதான் என் கதவு தட்டி
தூவான விரல்களால்
என் மீசையை கொஞ்சம் முறுக்கி
மார்பு மயிரை கோதி
மனசோடி பேசி
இதய வீணையை வாசி என்று
மின்னல் கொடி நாட்டி
என் யன்னல் ஓரத்திலும் நின்று
பாசுரத்தின் மூலவேர்வரை குழைந்து
ஒரு யாக மயக்கத்தில் இருக்கச்செய்வது.

தாயின் கொடியை கோவணத்திலும்
செருகமுடியாத துரதிஸ்டம்
தீபாவளி சிறுவனின் சீறுவாணம்போல்
சீசனாகவும் பாசனாகவும் மாறுகிறது
மண்ணுள் விதைந்தவரின் நினைவு
வேட்டிக்கரையும்
சிவப்பு மஞ்சளாய் வரும்
ஐயப்பா சாமிகள் போல்
அதையும் உடுத்துத்திரிவார்கள்
கனவுகளின் கதை தெரியாமல்
சில காலத்தில் வெருளிகளும் அதை உடுக்கும்
மஞ்சள் சிவப்பு சாயத்தை
பரஸ்பரம் ஊத்தி
பன்றிகள் போல் உருண்டு
இதுவும் ஒரு பண்டிகை ஆகும்
தன்னை தமிழென்றே அடையாளம் செய்யாமல்
தன் பேரும் பெருமைகளும் யாருக்குத் தெரியாமல்
எங்கள் ஊருக்குள் உலவி
வேருக்கு மட்டுமே தெரிந்த
வெற்றித்திலகங்களின் முன் எம்மாத்திரம் நாம்
ஆறுவருடங்களில் பிணங்களை விற்று
காலப்பழி தாங்கும் வெட்டியான்கள் நாம்
விசஊசி கண்டு பிடித்த பெரும் விஞ்ஞானிகள் ஆனோம்
யார் அடுத்த பிரபாகரன் போட்டிவைத்தோம்
சண்டை என்றாலே
இடுப்பின் கீழ் ஈரமாகிய ஒருவர்
சாவொரு புறம் நடக்க
பென்சன்தரும் உத்தியோகமும்
புறமோசன்களும் தேடிய வேறுசிலர்
மாண்புமிகு கௌரவங்களே
எப்போவதாவது மணலாற்றின் காட்டின்
பூவாசத்தை சுவாசித்திருக்கிறீரா
மண்கிண்டியில் வீழ்ந்த பெண் பிள்ளைகளின்
ஈகம் பற்றி ஏதும் தெரியுமா
இந்தா பிடி என்று உங்கள் பிள்ளைகளை
விடுதலைக்காய் ஈந்திருக்கிறீர்களா
ஒரு மக்கள் போராட்டம்
மண்ணில் புதைந்திருந்தால்
மானத்தோடிருக்கலாம்
அப்படி நடக்கவில்லையே
பாதிப்பேர் சாதி பார்த்துக்கொண்டும்
தொடர்களுக்கு இழித்துக்கொண்டும்
நாட்டில் பிரச்சனை என்று
வீடுகளை பாழடைய விட்டுவிட்டு
வேறு தேசங்களுக்கு விசா எடுத்துக்கொண்டும்
மட்டக்களப்பு ஏழைகளின் பிள்ளைகள்
கனகராயன் ஆற்றோரத்திலும்
மாங்குளம் பெருங்காட்டுக்குள்ளும்
ஆடை மாற்றாமல் அரைவயிறோடு போராட
காற்றுவாங்கிக்கொண்டும்
காலங்களித்து விட்டு
வா விடுதலையே என்றால் எப்படி வரும்

தயவு செய்து முதலில்
பிரபாகரனையும் மாவீரர்களையும்
நாம் விடுதலை செய்யவேண்டும்
அழுக்குப்படிந்த நெஞ்சங்களோடு
புனிதர்களை
எங்கள் போகங்களுக்கு பயன்படுத்தல் அசிங்கம்
விட்ட இடத்தில் இருந்து எழுதத் தெரியாதவர்கள் நாம்
பிரபாகரன்போல
மேடையில் மிமிக்ரி செய்வதல்ல
அடுத்தகட்ட விடுதலைப்போராட்டம்
முடிந்தால் சுதுமலையில் இருந்து
இறுதிவரை விடப்பட்ட அறிக்கைகளை
வாசித்து யோசியுங்கள்
யூதர்கள் எரித்திரியா வியட்நாம்
இப்படி ஏகப்பட்ட மேற்கோள்களோடு
மேடைப்பிரசங்கம் செய்கிறவர்களுக்கு
முதல் எல்லைப்படை மாவீர்ர்
அப்பனின் வரலாறு தெரியாது
மயில்குஞ்சனின் வல்லமை தெரியாது
நான்கு மறவர்களை மண்ணுக்காய் ஈந்துவிட்டு
இம்மாரியில் குடிசையில் நனையும்
உன்னத தாயை தெரியாது
ஒற்றைக்கண்ணும் ஒற்றைக்கையும்
விடுதலைக்காய் கொடுத்துவிட்டு
இற்றைக்கு முதிர் கன்னியாய் இருக்கும்
தோழிக்கு ஒரு மண வாழ்க்கை கொடுக்க
உள்ளுரிலும் வெளியூரிலும் ஒரு தமிழன் இல்லை
வெள்ளைக்காரிக்கு கணவராக தயார்
ஆனால் அன்ரன் பாலசிங்கம் ஆக தயாரில்லை
மண்ணுக்காய் வீழ்ந்த
என் அண்ணன்கள் இருந்திருந்தால்
இப்படி இருப்பேனா நான் என ஏங்கும்
ஒரு தங்கையை எத்தனைபேர் ஸ்பொன்சர் செய்வீர்கள்

மஞ்சள் சிவப்பு துணி மாவீரர்  பிரபாகரன்
ஆறுவருடம் ஓட்டியாச்சு இனி என்ன
மாவீர்ர் துயிலுமில்ல காணிகள் விட்டாயிற்று இனி என்ன
அரசியல் யாப்புக்கு ஆலோசனைகளும் சொல்லியாயிற்று இனி என்ன
வடக்கு மாகாண சபையின் சாவியை
ஆளாளுக்கு இடுப்பில் செருகினோம் இனி என்ன
அபிவிருத்தி குழு தலைவர் பதவிகள் பெற்றோம்
ஆடர்கள் போட்டோம் இனி என்ன
எல்லாம் கொடுப்போம் விடுதலைக்கு என்று
மாவீரர் விதைகுழியில் சத்தியம் செய்துவிட்டு
என் மயிருக்கு பூண் இல்லை என்று புலம்புகின்றோம் இனி என்ன
இந்த புண்ணிய நாட்களில்
என்னைநோக்கியே ஆயிரம் கேள்விகளை கேட்கிறேன்

மறவர்களின் காலடியில் இருந்து
இரவிரவாய் கவியெழுதி
விடிந்தபொழுதில் வண்டுகள் அளையா மலராய்
மாவீரர் நாமங்களில் சூட்டியவன் நான்
எனக்கு வருத்தம் இருக்காதா என்ன
திரும்பிவருவோமா இல்லையா என்று
இறுதி வார்த்தைகளை எழுதித்தந்துவிட்டு
வாசியுங்கள் காற்றில் கலக்கட்டும் என
களத்தில் வீழ்ந்த
தம்பி தங்கைகளை நினைத்தால்
என் நெஞ்சுவெடிக்காதா என்ன
விம்மாதா என் மனம்
விழியுடைந்து பாயாதா கண்ணீர்
மண்ணை மறந்து
இன்று இரவானால் தண்ணியில் மிதக்கின்ற
தம்பிகளை அழைத்து
அறிவுரை சொல்லி எண்ணிப்பார்
உன்னைப்போல்
அந்த உத்தமர்களும் வாழ்ந்திருக்கலாம்
கண்ணை விழி மகனே
கனவுகளை சும என
சொல்லத்தோன்றாதா எனக்கு
அங்கயற்கண்ணி என்ற ஏழை மகள்
என் இளவரசி
பள்ளிபோகாமல் பலமைல் கடல்நீந்தி
எண்ணியது முடித்துக்கரைந்த
நினைவுகள் அலையாய் உரசும்
பண்ணைக்கடலோரம்
படிக்கவென்று புறப்பட்டு
சோடிகளாய் குடையின்கீழ் குலவும்
இன்றைய இழிநிலையில் இறந்துவிடுகின்றது ஈகங்கள்

குறைந்;தது தமிழராய் இருக்கவும்
இன்னும் சிலகாலத்தில் கடினமாய் தோன்றும்
தமிழை உச்சரிப்பதும் சிலருக்கு வெட்கமாய் தோன்றும்
முள்ளிவாய்க்கால் நினைவும்
முன்பு நடத்தப்பட்ட படுகொலை நினைவுகளும் புனிதமற்று
செலிபிறேசனாகவும் செல்பி படங்களாகவும் மாறும்
அன்னியர் இன்னும் எங்களை
ஆங்காங்கு வைத்து அழகுபார்ப்பதற்கே விரும்புகின்றான்
நாம் கட்டிப்புரண்டு காறி உமிழ்வதே
உள்ளுர எதிரிகளின் எதிர்பார்ப்பு
எண்பதில் இருந்து இதையே நாமும் செய்கிறோம்
எப்பிடி விடுதலை சாத்தியம்
எமக்குள்ளும் எதிர்கட்சிகள் அதற்குள்ளும் குழுக்கள்
ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்கட்சிகள்
இந்த அரியவகை அரசியல் சித்தாந்தை
இனத்தை இழிவுபடுத்தி உருவாக்கிய கீர்த்தி எமக்கே
ஒரு கக்கூசை கட்டுவதற்கு கூட
கயிறிழுத்தல் போட்டி
ஆயிரம் ஆய்வுக்கட்டுரைகள்
ஒரு கொடியை ஏற்றுவது எக்காலம்
மனசெல்லாம் புண்கள் வலிக்கிறது
சிலுவையில் இருக்கிறவனை
ஆளாளுக்கு வந்து ஆணி அடிப்பதுபோல் இருக்கிறது
அன்னியனை நரி என்றோம்
ஏன் அவதானமாக இருக்கத்தெரியவில்லை
அன்றி எங்களுக்குள் ஒரு நரியை வளர்த்தெடுத்து
அடிவேரோடு சரிக்கும்படியான வித்தைகளோடு
அவன் பக்கம் ஏன் அனுப்பத்தெரியவில்லை
குள்ளப்புத்தியோடு வாழ்தல் சுபம் என்பதாலா

உங்கள் தீக்குச்சிகள் இளவாளித்துவிட்டதை
இன்னும் ஏன் உணரவில்லை
இப்போதும் பலபேருக்கு
தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கவும்
இழுத்துப்போர்த்திக்கொண்டு படுக்கவும்
விடிந்தவுடன் கடவாய் துடைக்காமல்
சந்தியில் பேப்பர் வாங்கி
காவலரண் தகர்ப்பை எட்டாம்ப்பக்கம்வரை
பூஞ்சிப்பூஞ்சிப்பார்த்து புளுகித்தள்ளி
தங்கள் வீட்டில் வலியின்றி வாழத்தான் விருப்பம்
அடுத்தவர் பிள்ளைகள் வீழ்வதிலும்
அதன் சூட்டில் வாழ்வதிலும் இன்றுவரை
இழிபிறவி ஆசைபலருக்கு
வேடுவன் ஒருவன் எம்மை
குலம்கோத்திரம் சொல்லி
தூசணத்தால் தூற்றுகிறான்
வேலிதாண்டாமல் அகிம்சையின் இருப்பிடமாய்
கைகட்டி நின்றோமே ஏன்
இன்றல்ல பிழை வரும் வழிகளெல்லாம்
நாம் விட்ட தவறுகளுக்கு
அறுவடைகளை அறுத்துக்கொண்டிருக்கின்றோம்.
செவ்விரத்தையை செவ்வந்தியை துளிசியைகூட
சந்தேகப்படவேண்டியிருக்கின்றது
இரவு அவை பரிகள் நரிகளானதுபோல்
கஞ்சாவாய் மாறிவிட்டால்
மாணிக்கவாசகர் நிலை என்ன
மக்காள்
எஞ்சியிருக்கும் ஈழத்தமிழினத்தை
எப்பிடி சிதைவில் இருந்து மீட்கலாம்
சிந்தியும்
அதுவே உத்தமர்களுக்கு செய்யும் உன்னத கடமை
சள்ளை விழுமென
பிள்ளைபெறாமல் இருக்காதீர்கள்
ஈன்றெடுங்கள் இமயங்களை
வன்னிமகன் என்றும் வான்விழி என்றும்
நல்லினி என்றும் நாமகள் என்றும்
மலரவன் என்றும் மனுநீதி என்றும்
மனதுவிரும்ப பெயரிடுங்கள்
பெயர்களே அவர்களை பிழைவிடாது நடக்கவைக்கும்
இனமானத்தை பட்டவர்த்தன உண்மையாய்
முப்படைகளோடு காட்டிய நீங்கள்
இரவுபகலாய் இதிகாசபுரட்டுக்களை
தொலைக்காட்சிகளில் காட்டி
எங்கள் இனிய சந்ததியை
குரங்கு வரம்தரும் என பொய்மைக்குள் புதைக்காதீர்கள்
குறத்திதான் மறத்தீயாய் இருந்தாள்
அவள்தான் எங்கள் மூதாதை
அரியாத்தைதான் ஆனையை அடக்கியவள்
அவள்தான் எங்கள் றோல்மொடல்
ஒரு தமிழ்மன்னனின் மனைவியாய்
மதிவதனி என்பவள் இருந்தாள் என்பதை
சொல்லிவையுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு
பண்டாரவன்னியனின்  படை தளகர்த்தன்
குமாசிங்க முதலியார்
வெள்ளைகளால் தூக்கிலிடப்பட்ட
வட்டுவாகல்மரமிருந்த நிலத்தில்
கரிகாலன் என்ற மன்னன்
ஈராயிரத்து ஒன்பதில் தன் குடும்பத்தையே
மண்ணுக்காய் கொடுத்தான் என்பதை
குறித்துவிடுங்கள் பிள்ளைகளின் நெஞ்சில்
நினைவுகளை அட்சரம் பிசகாமல்
அடுத்த சந்ததிக்கு கடத்துகின்ற கடமையை
இந்த புனித கார்த்திகை தருகின்றது பூசியுங்கள்!
































Thursday, September 15, 2016



வேதனையுடன் பொன்.காந்தன் ஈழத்தில் இருந்து ......








தம்பி விக்னேஸ் நீ போய்விட்டாயாம்
நீதான் நெருப்பு
அதை அறிவிக்க வேறு பலவழிகள் இருந்தன
நீ இறந்து போனது முட்டாள் தனம்
நீ என் தம்பி என்பதற்காக
உன் முடிவை ஆமோதிக்க முடியாது
நீ நெருப்பு
நீ இருந்திருக்க வேண்டியவன்
இறந்திருக்க வேண்டியவன் அல்ல
நீ கட்சியின் தொண்டன் அல்ல
நீ தமிழர்களின் தொண்டன்
நீ இருந்திருக்கவேண்டியவன்
நீ உண்மையானவன்
நீ இறந்திருக்க வேண்டியவன் அல்ல
பால்வடியும் உன் முகத்திற்கு
நான் தலைசாய்க்கின்றேன் வணங்குகின்றேன்
நீ போயிருக்கக்கூடாது
உனக்கென இன்னும் கடமைகள் இருந்தது
நீ பொறுமை காத்திருக்கவேண்டும்
நான் காவிரிக்காக இரங்கவில்லை
அது சித்து விளையாட்டு
உனக்காக கலங்குகின்றேன்
அடுத்த சூப்பர் ஸ்ரார் யாரென்று
வாக்கெடுப்பு நடத்துகின்ற இளைஞர்கள் மத்தியில்
உன்னுயிர் எத்தனை மாபெரிது தெரியுமா
சானல்களுக்கும்
அங்கு தெரிகிற சதைகளின் இடைவெளிகளுக்குள்ளும்
சதா தொலைகின்ற இன்றைய
இளைய தலைமுறைகள் மத்தியில்
நீ மாபெரும் கோபுரம் என்பதை ஏன் அறிந்திருக்காது விட்டாய்
நீ உன் இறுதி வார்த்தைகளை
கடித வடிவில் எழுதிக்கொண்டிருந்த
அந்தக் கணத்திலும்
நீ தீயில் கருகிக் கொண்டிருந்த
அந்தக்கணத்திலும்
நீ உயிருக்காக போராடிக்கொண்டிருந்த
அந்தக்கணத்திலும்
உன் கடைசி மூச்சு காற்றில்
அந்தக்கணத்திலும்
தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாட்டிலும்
ஏன் நீ நே
சித்த ஈழத்திலும் கூட
தொலைக்காட்சித் தொடர்களையும்
நட்சத்திர களியாட்டங்களையும்
ஒரு கூட்டம் பார்த்துக்கொண்டிருந்தது
அந்த கூட்டத்தின் பெயரும் தமிழர்கள்தான்
அறிவாயா தம்பி
இன்றில்லை எனில் நாளை நாம் வெல்வோம்
அதற்காய் நீ வேண்டும்
யாருக்காகவோ
உனது பெருமைமிக்க உயிரை
நாம் தொலைத்துவிட்டோம் என்றே எண்ணுகின்றோம்.
அன்னியனை அடக்குவதும் வெல்வதும் வெகுசுலபம்
அதற்கு நல்ல தலைமை வேண்டும்
எத்தனை பேர் தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறார்கள்
நீ எண்ணிப்பார்த்திருந்தால்
உன் உயிர் வீணாகவே போகும் என்பதை உணர்ந்திருப்பாய் தம்பி
ஏன் நீ கூட உலகத்தமிழர்களின்
தன்னிகரற்ற தலைவனாய் இருந்திருக்கலாம்
நான் நினைக்கிறேன்
தன்னிகரற்ற எங்கள் நாளைய தலைவன்
பிரிந்துவிட்டான் என்றே!

Wednesday, September 14, 2016

Monday, September 12, 2016

பொன்.காந்தன் : நந்திக்கடலுக்கான பாதை

பொன்.காந்தன் : நந்திக்கடலுக்கான பாதை: நந்திக்கடலுக்கான பாதையில் புதைந்து போன குழந்தைகளின் ஒலிகள் சதை கிழிந்து தலை சிதறி கதை முடிந்த அன்னையர்களின் ஒலிகள் எனக்கு இப்போ...

பெருமூச்சு




முதலில் கொல்லாதே
என்னை கொல்லாதே
பிறகு குத்தாதே குத்தாதே
அடுத்து
அப்பனை நம்பாத
செத்தான் செத்தான்
தகரங்கள் போத்தில் கண்ணாடிகள்
தாறுமாறாய்
உடைந்து விழும் சத்தம்


பதறி எழும்பி
பக்கத்து வீட்டுக்காரரையும்
தட்டி எழுப்பி
தாழ்வாரத்தில் கிடந்த
தடி இரண்டெடுத்து
கொடுக்கு கட்டி
கூக்குரல்
சண்டை குழறல்
சத்தம் வந்த பக்கம் ஓடினேன்
ஒரு நாலைந்து முற்றத்தில்
நாரி முறித்தாட
ஊரிப்பட்டது கைதட்ட
நிண்டு பார்த்தேன்
ஒண்டுமில்லை
இண்டைய சினிமா பாட்டுத்தான்
என்னை எழுப்பி
இவ்வளவிளைக்க ஓட வைச்சிருக்கு
மண்டை குழம்பி ஒண்டும்பேசாமல்
இல்லம் திரும்பினேன்
எங்கேயோ மெல்லிதாய்
தேன் கிண்ணத்தில்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பூவாடை வீசி வர பூத்த பருவமா
காற்றில் கலந்து கொண்டிருந்தது
எல்லாத்துக்குமாய் சேர்த்து
என்னிலிருந்து ஒரு பெரு மூச்சு

பக்தி



மாம்பழத்துக்கு மல்லுக்கட்டினாய்
முன் கோபம் உனக்கு
சுள் என்று மூக்கில்
கோபித்தாய்
மயிலேறிப் பறந்தாய்
மானஸ்த்தான் நீ
புலுடாக்கள் உனக்கு பிடிக்காது
உலகை சுற்றிக் காட்டினாய்
ஓர்மத்தொடு
கோவணாண்டியாய்
கிழவிக்கு தோன்றினாய்
பாடப்பெற்றாய்
பரவசமாயிருந்தது
இயல்பான குணங்களுடன்
உன் இயற்கை
எல்லோருக்கும் பிடித்திருந்தது.
முதலாம் புலிகேசி நீ
சுட்டபழம் சுடாத பழம் தந்த
முதலாம் வடிவேலு
இடைக்கிடை யார் துன்புற்றழைத்தாலும்
தலைமை தாங்கி தளபதியாகி
களமாடுவாய் தோழர் சே போல
அதுவரை எல்லாம் நலம்
உன்னை நம்பினேன்
நேற்றோ
உன் திருமுகத்தை
கையேந்திகளின் தேசத்தில்
பட்டுப் பீதாம்பரத்துள்ளும்
கொட்டிக் கிடந்த
தங்க நகை சாத்துப்படிக்குள்ளும்
தேடிக் கண்டு பிடிக்க பட்டபாட்டில்
ஒரு பணக்கார கந்தசாமி
பாடப்பெற்றான்

விலகி வழி விட்டேன்
வர்ணங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன
நதிகள் இரண்டு பாய்ந்துகொண்டிருந்தன
பறவைகள்
கூட்டம் கூட்டமாய்
எங்கிருந்தன!!
அருகே ஆயிரம் நிலவுகள் உரசிக்கொண்டு
இங்கேயுமா வானம்!!
இன்னும் விலகி ஓரமாய் நின்றேன்
இன்னதென்று உரைக்கமுடியா
அழகிய பட்சியொன்று
அதன் இனிய பாடலில்
நானுமிருந்தேன்..
அன்பே
இரவு திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்
என்
இதயத்துக்குள் இருக்கும் உன்னை
ஒரு வெள்ளை வான்
கடத்த வந்தது போல் ஒரு கனவு
நீ வந்து விட்டது போல் நிஐம் எப்போது!

குசினிக்குள் போனேன்
அடுப்புக்குள் படுத்திருந்த பூனை
அன்ரனா வழியேறி
அப்பால் ஓடியது
கொடுப்புக்குள் சிரிப்பெனக்கு

சந்திப்பு +காலம்




அவர் நீண்ட காலத்திற்கு பின்
என்னை சந்தித்தார்
கனகாலம் நலமா என்றார்
நலம் என்றேன்
காந்தன் எப்பிடியிருக்கிறான் என்றார்
அதிர்ந்து போனேன்
அது நான்தான் என்பதற்கிடையில்
பழைய மாதிரி
இப்பவும் அவன் குழப்படியா என்றார்
இல்லை இல்லை
இப்ப குறைவு என்றேன்
அரசியல் தேசியம் எண்டு
ஏதோ கத்துறான் என்றார்
எப்பவும் அதுதான் என்றேன்
கவிதையெண்டும் ஏதோ
இடைக்கிடை எழுதுறான் என்றேன்
உந்த விசர்க்குணம்
படிக்கிற காலத்திலேயே
அவனுக்கு இருந்தது என்றார்
கடுமையாக கோபம் வருமே
அவனுக்கு என்றார்
இல்லை இப்ப கொஞ்சம் சாந்தம் என்றேன்.
அப்ப அவன் சூப்பி ரவி
எங்கே என்றேன்
ஆர்.....ஹாஹா
நான் தான் அது என்றார் அவர்

நந்திக்கடலுக்கான பாதை




நந்திக்கடலுக்கான பாதையில்
புதைந்து போன குழந்தைகளின் ஒலிகள்

சதை கிழிந்து தலை சிதறி
கதை முடிந்த
அன்னையர்களின் ஒலிகள்
எனக்கு இப்போதுவரை கேட்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
காயமுற்று
மருந்துகள் இன்றி வலி பட்டு
உயிர் போன உறவுகளின் ஓலம்
குடும்பமாய் எச்சமின்றி எரிந்துவிட்ட
சாம்பலில் எழுந்த
ஏக்கக் குரல்கள் எனக்கு இதுவரை கேட்கிறது.

நந்திக்கடலுக்கான பாதையில்
ஊரிழந்தவனின் கடைசி மூச்சின் ஒலி
அகதி ஒருவனின் ஆன மட்டுமான துயரம்
எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது

நந்திக்கடலுக்கான பாதையில்
இசைப்பிரியாவை இழுத்துச் செல்லும்
வேட்டை நாய்களின் கடிபாடு
இரைகண்ட குரைப்பு
கண்டல் நிலத்தில் விறாண்டிய நக ஒலி
ஒரு முயல் குட்டி
வெறி நாய்களை கடவுளாய் வரம் கேட்ட
வறண்ட கெஞ்சல்
எனக்கு இதுவரை கேட்கிறது

நந்தி கடலுக்கான பாதையில்
உன் திசைகளில் இருந்து
பாய்ந்த எறிகணைகளில்
உன் திசைகளில் இருந்து புறப்பட்ட
யுத்த விமானங்களில்
டாங்கிகள் கொட்டிய குண்டுகளில்
செவிப்பறை கிழிந்த
எனக்கு எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போது

வீரனே கமால்
உமக்கு மட்டும் நந்திக்கடலுக்கான பாதையில் ஏதும் கேட்க வில்லை

துட்ட கைமுனுவின் கனவாக
சிங்கபாகுவின் வாளாக தீட்டப்பட்டு
எம்மிடம் அனுப்பப்பட்ட உங்களிடம்
தட்டு நிறைய சுமந்து செல்லும்
வெண் தாமரைகள் எந்த இரக்கத்தையும் அறிவித்திருக்கவில்லை

நந்திக்கடலுக்கான பாதை நோக்கிய
உனது நாட்களில்
உனது கிராமத்துக்கும்
உனது சுற்றங்களுக்கும்
காட்டுமிராண்டியாய்
அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனை
புனிதமாக்கும்
உன் நந்திக்கடலுக்கான பாதையில்
வெறி கொண்டிருந்த
ஆண்குறிகள் பேசாது என்றும்
மார்புகளில் விறாண்டிய நகங்கள்
எழுதாது என்றும்
யோனிகளை பிளக்கச் சொன்ன உனது
காற்றில் கலந்திருக்கும் சங்கேதங்கள்
மொழி பெயரா என்றும்
பொம்மைகளின் ஏக்கத்தோடு முடிந்த
குழ்ந்தைகளின்
மறு பிறவி உன் சந்ததிகளிடம் புகுந்து
அலைக்க
கட்டி வைக்கப்பட்ட
புனித யானைகளிடம் மதம் ஏற்றி
தெருக்களை துவம்சமாக்குமெனும்
அமானுஸ்யம் உண்மையில்லையென்றும்
நம்புகிற
உன் நந்திக்கடலுக்கான பாதை
உங்கள் படைகளால் பரிசளிக்கப்பட்ட
எமது எல்லா மரணங்களும்
நிகழ்ந்த வீடுகளிடையே
எதுவரை போகும்!