Sunday, July 3, 2016

உன்னைப்போல்






எவளோ ஒருத்தி பேரழகியென்று
யார்யாரோ பிரமிக்கும்போது
அவள் உன்னைப்போல இருப்பாளா என்று கேட்டேன்.
உன்னைப்போல அழகிக்காக
ஏங்குகிறது நிலம்.
நீ அழகாய் இருந்த கணத்தில்
நீ  அழகாய் நடந்த நிலத்தில்
நீ அழகாய் பேசிய வார்த்தைகளோடு
ஒரு ஓவியத்துக்கும்ஓவியனுக்குமான துாரத்தில்
நானுமிருந்தேன்.
நான் பிரமித்த நாட்களில்
சொர்க்கத்துக்கு சாட்சியாய் நீயே இருந்தாய்
என் நிலம் இழக்க விரும்பாததது உன்னையும்தான்.
உன்னைப்போல பெண்கனை ஆண்கள் மணக்க விரும்பியதை
என் தெருக்களில் நான் அறிவேன்.
துரியோதனர்களிடம் நீ சிக்காதிருக்க
இதிகாசம் ஆசைப்பட்டது.
நந்திக்கடலோரத்தில்
உன்னை மான் போல துரத்தி
மலர்போல பறித்து
மயிலிறகாய் பிடுங்கி
பெரு வாய் பிளந்த   கொடூர மிருகங்கள்
உன்னை பங்குபோட்டுக்கொள்வதில்
நிச்சயம் ஒரு போர்  செய்திருக்கக்கூடும்.
உன் துயரில் இருந்து ஆறுதல் பெற
நீதான் வரவேண்டும்.
ஒருகோடி காதல்வரிகள்
உனக்கு அஞ்சலியான துயர்
பேரழகிகளை கண்ட எந்த கவிஞர்களுக்கும் வராதிருக்கட்டும்.

No comments:

Post a Comment