Sunday, July 3, 2016

இன்றைக்கும் நாளைக்குமாக !






இது எமது கடைசிப் போசனமாக இருக்கலாம்
இதை எப்படி உண்ணவேண்டும் என்பதற்கு
எங்கள் ஒவ்வொருவருக்கும்
இதுவரை இல்லாத சிந்தனை தேவையாய் இருக்கிறது.
முன்னைய பொழுதுகளில் இதுவும்
பற்றாக்குறையான
புரட்சிக்காரர்களுக்குரிய பழஞ்சோறுதான்
ஆனாலும்
இதை பிசைகிற விரல்கள் ஒவ்வொன்றும்
பேனாக்களாக இருக்கவேண்டியது
நமது வாழ்வின்
இறுதிப்பெரும் உச்சரிப்பாக இருக்கும்.



கவளம் ஒவ்வொன்றுக்காகவும்
உதடுகளைத் திறக்கிறபோது
முகங்களை முகங்கள் பார்க்காமல்
இருந்துவிடப்போவதில்லை
நாம் எத்தனை சவால்களை
ஆட்டிவைத்தவர்கள்.
ஆனால்
இக்கணங்களை ஏனோ
எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை.
பிரிவின் வரவேற்பறையில் இருந்துதான்
நாம் உணவருந்துகிறோம்



இங்கேதான்
வாழ்வின் மிக ஆனந்தமான கணங்களை
உருவாக்க முடியும்.
இக்கணத்தில் வருகின்ற சிரிப்புக்கும்
வராத அழுகைக்கும்
சவால் நிறைந்த மனிதர்களாகிய நாம்
சவால் விடாதிருப்போமாக.
ஆனால்
எமது பிணம்கூட
பூமிக்கு சவால் நிறைந்ததாக
நீட்டி நிமிர்ந்து படுத்திருக்கவேண்டும்.



எமை எரிக்கும் தீ கூட
தோற்றபடி எரியவேண்டுமென்று
நினைக்கும் பக்குவம் உடையவர் நாமெனில்
இந்தக்கடைசிப் போசனம்
எவ்வளவு இனிப்பானதாக இருக்கும்.
நண்பர்களே நண்பிகளே
இந்தப்பொழுதுகளில் எமது உறுப்புகள் எல்லாமே
வார்த்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை.

No comments:

Post a Comment