Sunday, July 3, 2016

ஒரு ஊரின் நாட்குறிப்பு !






ஏரிக்கரையில்
படுவான்கரையில்
சூரியன்
மொய்ப்பதாக
அங்கு
வேர் வாசம்கொண்ட மலர்கள்
நோவாவின் பேழைக்கு
விண்ணப்பித்தன
பி.பி.சி காற்றில்.

தூளிக்கும்
ஊஞ்சலுக்குமான கயிறுகள்
தூக்குக்கயிறாகிறது
மீன்பாடுகிறது
தேன் நாட்டில்.

அரிதாரத்தோடு
அதிகம் பழக்கப்பட்டவர்கள்முன்
ஒட்டுப்புன்னகைகள்
எப்படி செல்லுபடியாகும்.

கறவைகள்
மடிநொந்து அலறவும்
தேன் கூடுகள்
வீங்கிப்பெருத்து
நிலத்தில் விழுந்து சிதறவும்
வரம்புகள்
புற்களில் மறையவும்
வசந்தன் பாட்டுக்கள்
வாயிழந்து போகவும்
ஒரு
ஊரின் நாட்குறிப்பு
கனக்கிறது
செருகப்பட்ட வாசகங்களால்.

வர்ணக்கொடிகளோடு
முகவரி இழந்த ஊருக்கு
அணிவகுப்போரே
புண்ணிருக்கும் இடத்துக்கு
காகங்களாய்
போவதென்ன!
முகங்களொடு
பேசத்தெரிந்தவர்கள்தான்
முண்டியடிக்கின்றார்கள்
இதயங்களொடு
இரண்டறக் கலக்கத்தெரிந்தவர்கள்
உலக சிம்மாசனங்களில்
எங்கேனும்
எழுந்தருளியுள்ளாரா!


இதுவரை
கண்ணை மூடிக்கொண்டு
காடுகளில்
தேனெடுத்த தேவதை
நேற்று
தாந்தாமலையில்
உடலெல்லாம்
கண்திறந்து அழுதாள்
சிங்கத்துக்கு
அவர்கள் பிறந்த
உண்மையை
நகங்கள்
மகாவம்சமாய்
அவள் உடலில் எழுதியிருந்தன.

ஏரிக்கரையில்
வாகரையில்
நிலவு நித்தியமாவதாக
அங்கு
மெழுகுதிரிகள்
நோவாவின் பேழைக்கு
ஏங்கித் தவிக்கின்றன

No comments:

Post a Comment